Published : 23 Jun 2015 10:16 PM
Last Updated : 23 Jun 2015 10:16 PM

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் அபார ஆட்டம்: பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரை நொறுக்கினார்

நார்வே செஸ் தொடரின் 6-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் மேக்சிம் வஷியே-லக்ராவ் என்பவரை வீழ்த்தி இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீரர் கிர்சுக் என்பவரை வீழ்த்தி பல்கேரிய வீரர் வசலின் டோபலோவ் முதலிடத்தை வலுவாக்கிக் கொண்டார்.

வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் 'சிசிலிய நய்டர்ஃப்' தொடக்கத் தடுப்பு உத்தியைக் கையாண்டார். அதாவது ராஜா முன்னால் இருக்கும் சிப்பாயை 2 கட்டங்கள் முன்னால் நகர்த்துவது, பிறகு வலது புறம் உள்ள குதிரையை அதாவது ஜி1-இல் உள்ள குதிரையை எஃப்-3 கட்டத்துக்கு கொண்டு செல்வது. பிறகு ராணியின் முன்னால் உள்ள சிப்பாயை 2 கட்டங்கள் முன்னால் நகர்த்தி ஜி1 பானுக்கு அருகில் நிறுத்துவது.

ஆனால் இப்படி ஆனந்த் செய்யும் போது ஆக்ரோஷம் காட்டிய பிரான்ஸ் வீரர் லக்ராவ், தனது பிஷப் முன்னால் இருக்கும் சிப்பாயை 2 கட்டங்கள் முன்னால் நகர்த்தி ஆனந்த் குயீனுக்கு முன்பு நின்று கொண்டிருந்த சிப்பாயை நகர்த்திய இடத்திற்குக் கொண்டு வந்து வெட்டினார். ஆனால் இவர்தான் ஏற்கெனவே குதிரையை எஃப்3-யில் வைத்துள்ளாரே. இதனால் லக்ராவின் சிப்பாயைக் குதிரையால் காலி செய்தார். இப்படியாக ரணபலியில் தொடங்கியது ஆட்டம். இருவருமே சிப்பாயை இழந்ததையடுத்து லக்ராவ் தனது வெள்ளைக்கட்ட குதிரையை முன்னே கொண்டு வந்தார்.

இதற்கு பதிலடியாக ஆனந்த் தனது இடப்புறம் உள்ள வெள்ளைக் கட்ட குதிரையை அதன் இருப்பிடத்திலிருந்து நகர்த்தி முன்னேற்றினார். உடனே இருவரும் தங்கள் வலப்புற சிப்பாயை சும்மா ஒரு கட்டம் நகர்த்திக் கொண்டனர். சிலபல சிப்பாய்கள் நகர்த்தலுக்குப் பிறகு தனது வெள்ளைக்கட்டத்திலிருந்த பிஷப்பை ஒரு கட்டம் குறுக்காக நகர்த்தி இன்னொரு பவரை வெளியே கொண்டு வர முயன்றார் ஆனந்த். லக்ராவும் தனது கருப்புக் கட்ட குதிரையை வெளியே எடுத்தார்.

உடனே ஆனந்த் அபாரமாக தனது கருப்புக் கட்ட குதிரையை வலப்புறமாக 3 கட்டம் முன்னேற்றினார். இந்நிலையில் லக்ராவ், இரண்டு குதிரை, இரண்டு சிப்பாய்களுடன் தனது ராஜா, ராணிக்கு தடுப்பு அரண் அமைத்திருந்தார். ஆனந்த் பான்-கள் மூலமே டீல் செய்தார். ஆனந்தும் எச்-4-ல் வரிசையாக 3 சிப்பாய்கள் ஒரு குதிரையை நிறுத்தினார். உடனே லக்ராவ் தனது குதிரையை பின்னால் எடுத்துக் கொள்ள, ஆனந்த் தனது யானையை வெளிக்கொணர்வதற்காக ‘கேசில்’ (கோட்டை) கட்டிக் கொண்டார்.

லக்ராவ் உடனே தனது வலது புறக் குதிரையால் ஆனந்தின் குதிரையைச் சாய்த்தார். ஆனால் இது மிகவும் புரிந்து கொள்ள முடியாமல் அமைந்தது. ஏனெனில் ஆனந்தின் குதிரையை அவர் தன் குதிரையால் காலி செய்யும் கட்டத்துக்கு நேராக ஆனந்தின் ராணி நேராக இடையூறின்றி இருந்ததை கவனித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனந்த் முறையாக தனது ராணியினால் லக்ராவின் குதிரையை காலி செய்தார். இதன் பிறகு ஆனந்தின் ராணி வெளிவந்ததால் லக்ராவும் ‘கேசில்’ அமைத்து கொண்டு தனது யானையை வெளியே கொண்டு வர முயற்சி செய்தார்.

இந்நிலையில்தான் ஆனந்தின் இன்றைய ஆட்டத்தின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று நிபுணர்கள் வர்ணித்த மூவ் நடந்தது. தனது கருப்புக் கட்ட பிஷப்பை வலப்புறமாக குறுக்காக நகர்த்தி லக்ராவ் தனது ராஜாவை கேசில் செய்து கொண்டதற்கு அருகேயுள்ள சிப்பாயை அகற்றினார் ஆனந்த். அந்த பிஷப்பை லக்ராவ் தனது சிப்பாயால் வெட்டினார். ஆனால் பிஷப் எங்கிருந்து கிளம்பியதோ அதே நேர் கோட்டில் குயீன் இருந்ததை லக்ராவ் கவனிக்கவில்லை. குயீனால் அந்தச் சிப்பாயை ஆனந்த் காலி செய்ததோடு, லக்ராவின் ராஜாவுக்கு இக்கட்டை தோற்றுவித்தார். ஆனால் லக்ராவ் அதன் பிறகு ஆனந்தின் குதிரையை தனது குயீனால் வெட்டினார். இப்போது ஆனந்தின் பகுதிக்குள் லக்ராவின் கருப்ப்பு ராணி நுழைந்தது.

அவரது ராணியைக் காலி செய்ய ஆனந்த் தனது யானையை அதற்கு நேராக கொண்டு சென்றார், தனது ராணியை காக்க லக்ராவ் தனது குதிரையை பேக்-அப் செய்தார். இந்நிலையில் சிப்பாய் ஒன்றை லக்ராவ் சும்மாவாவது நகர்த்த ஆனந்தின் சிப்பாய் அதைக் காலி செய்தது.

இந்நிலையில் லக்ராவ் மீண்டும் ஒரு தவறிழைத்தார். தனது ராஜாவுக்காக காவலாக நின்று கொண்டிருந்த யானையைக் கொண்டு நேராக ஆனந்தின் தொடக்க கட்டத்திலிருந்த யானையை வெட்டினார். ஆனால் அதுவும் நிலைக்கவில்லை, ஆனந்த் அங்கு இதை எதிர்பார்த்து அமைதியாக பிஷப்பை வைத்திருக்கிறாரே. பின்னால் ஒரு கட்டம் அவ்வளவுதான் ஆனந்தின் பிஷப்பினால் லக்ராவின் யானை காலியானது.

இந்த நிலையில் ஆனந்தின் எல்லையில் லக்ராவின் குயீன் நகர முடியாமல் கட்டுண்டது. அப்போது லக்ராவ் மிகவும் புரியாத புதிராக ஒரு மூவைச் செய்தர். அதாவது தனது குயீன் வெட்டுபடாமல் இருக்க வைத்திருந்த குதிரையை பின்னால் நகர்த்தினார், இப்போது என்னவாயிற்று லக்ராவின் குயீனுக்கு நேராக நிறுத்தப்பட்டிருந்த யானையைக் கொண்டு குயீனை வெட்டுவது மிகவும் எளிதாகப் போனது ஆனந்துக்கு, தெரிந்தே ஏன் இப்படி அவர் தனது குதிரையை பின்னால் கொண்டு சென்றார் என்பதும் புரியாத புதிரே.

இதனால் லக்ராவின் ராஜாவை தனது குயீன் மற்றும் ஒரேயொரு சிப்பாயினால் சிறைப்படுத்தினார் ஆனந்த்.

பிஷப்பை பலி கொடுத்தது ஆனந்த் அமைத்த பொறி, இதில் லக்ராவ் சிக்கி சின்னாபின்னமானார். இது குறித்து ஆனந்த் கூறும்போது, “பிஷப்பை வெட்டுக் கொடுக்கும் மூவை பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால் அவர் பிஷப்பை வெட்டியது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அது ஒரு பாதுகாப்பான பலிகொடுத்தலே. எப்பவுமே டிரா என்ற ஒன்று என்வசம் இருந்தது.

லக்ராவ் கூறும்போது, “பிஷப் மூலம் வைக்கப்பட்ட பொறியை நான் முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x