Published : 15 Nov 2014 06:43 PM
Last Updated : 15 Nov 2014 06:43 PM

வேகப்பந்து வீச்சு பிரச்சினைகளை இந்திய அணி கடந்து விட்டது: சஞ்சய் பாங்கர்

இந்திய அணியில் ஒரு பிரச்சினை நிரந்தரமானது என்றால் அது வேகப்பந்து வீச்சு. ஆனால் அந்தப் பிரச்சினைகளை நமது அணி கடந்து வந்து விட்டது என்கிறார் சஞ்சய் பாங்கர்.

இது குறித்து உதவிப் பயிற்சியாளர் பாங்கர் கூறியதாவது:

"நிறைய ரோடேட் செய்து வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதிக சுமையை சுமக்கும் ஷமி, புவனேஷ் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தொடருக்கு அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் சரியான உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

தயாரிப்பு அருமையாக நடைபெற்று வருகிறது, பணிச்சுமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சு கொண்ட இந்திய அணியாக இது இருக்கும்.

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பைக்கு முன்பாக தொடரில் ஆடுவது அந்த ஆட்டக்களங்களின் வேகம் மற்றும் எழும்பும் பந்துகளுக்கு நாம் தகவமைத்துக் கொள்ள முடியும்.

ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் இரண்டிலும் விளையாடும் வீரர்கள் இருப்பதால் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராவது பெரிய பிரச்சினையாக இருக்காது. நாங்கள் டெஸ்ட் போட்டிகளுக்காகவும் இப்போது பயிற்சி செய்து வருகிறோம். டெஸ்ட் அணி வீரர்களும் இப்போது பயிற்சியில் எங்களுடன் ஈடுபட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளையும் மனதில் இருத்தியே பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்.

ஆஸ்திரேலியா தொடரை மனதில் கொண்டே, இப்போது இந்தத் தொடரில் விக்கெட்டுகளை அதிகம் இழக்காமல் பின்பாதியில் ரன்கள் குவிக்க உதவுமாறு ஆடி வருகிறோம்.

இங்கிலாந்து உட்பட சில தொடர்களில் வெற்றிக்குக் காரணம், நம் பேட்ஸ்மென்கள் பெரிய ஸ்கோர்களை அடிப்பதே” என்றார்.

உமேஷ் யாதவ் பற்றி...

“அவர் இந்திய அணிக்கு பலம் சேர்த்து வருகிறார். ஆட்டம் போகப்போக அவரது ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அவர் இப்போது கட்டுப்பாட்டுடன் வீசி தொடக்கத்தில் சில விக்கெட்டுகளைப் பெற்றுத் தருகிறார். இது மிகவும் முக்கியமாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x