Published : 14 Mar 2014 11:07 AM
Last Updated : 14 Mar 2014 11:07 AM

டி20 உலகக் கோப்பை: பந்து வீச்சுக்கும் தயாராகிறார் யுவராஜ்

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பந்து வீச்சிலும் சிறப்பான பங்களிப்பை ஆற்ற பயிற்சி மேற்கொண்டு வருவதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி யுவராஜ் சிங் சாதனை படைத்தார். அப்போது முதல் 20 ஓவர் கிரிக்கெட் என்றால் இந்திய ரசிகர்களால் யுவராஜ் சிங் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரராகியுள்ளார்.

இந்நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வங்கதேசத்தில் வரும் 16-ம் தேதி தகுதிச் சுற்று ஆட்டங்களுடன் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர். இப்போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பது:

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக இல்லை. பீல்டிங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும், இந்திய வீரர்களின் பந்தில் அதிக ரன் சென்றதற்கு முக்கியக் காரணம்.

அதே நேரத்தில் 20 ஓவர் கிரிக்கெட் என்பது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எனவே இப்போட்டியில் நமது பந்து வீச்சு முன்பை விட சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறேன்.இப்போட்டிக்காக பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

பேட்டிங்கை பொருத்தவரையில் கடைசி 5 முதல் 10 ஓவர்கள்தான் மிகவும் முக்கியமானது. நமது அணியில் நான், கேப்டன் தோனி, ரெய்னா, கோலி, ரோஹித் சர்மா என வலுவான பேட்ஸ்மேன்கள் இருக்கிறோம். எனவே கடைசி கட்டத்தில் அதிக ரன்களைக் குவித்து, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருப்பது குறித்துப் பேசிய யுவராஜ் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இரு நாட்டு ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x