Published : 08 Nov 2014 09:27 AM
Last Updated : 08 Nov 2014 09:27 AM

அட்லெடிகோவுக்கு அதிர்ச்சியளித்தது புனே

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் புனே சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது.

இந்த ஆட்டத்துக்கு முன்பு வரை தோல்வியை சந்திக்காத வலுவான அணியான அட்லெடிகொ தனது சொந்த மண்ணில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளை எட்டிய புனே அணி, புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் இருந்த புனேவின் டேவிட்டிடம் பந்து செல்ல, அவர் அதை மிக அழகாக கோல் கம்பத்தை நோக்கி கிராஸ் செய்தார். அப்போது அட்லெடிகோ பின்கள வீரர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறிய டூடூ தலையால் முட்டி கோலடித்தார். இதனால் புனே அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற, கொல்கத்தா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் புனே மிட்பீல்டர் டேவிட் கொடுத்த பாஸை மைதானத்தின் நடுப்பகுதியில் வைத்து வாங்கிய மற்றொரு மிட்பீல்டர் கான்ஸ்டான்டினோஸ் கட்சூரனிஸ் வேகமாக முன்னோக்கி எடுத்துச் சென்றார். 18 யார்ட் பாக்ஸை நெருங்கிய அவர் அங்கிருந்தபடியே மிகத்துல்லியமாக கோலடிக்க, புனே 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

84-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பின் மூலம் அட்லெடிகோவின் ஃபிக்ரு கோலடிக்க, 89-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பில் கோலடித்து பதிலடி கொடுத்தார் புனேவிட் டேவிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x