Published : 19 Nov 2014 04:24 PM
Last Updated : 19 Nov 2014 04:24 PM
தியோதர் கோப்பைக்கான வடக்கு மண்டல அணிக்கு தங்கள் பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று சேவாகும், கம்பீரும் ஒதுங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் வடக்கு மண்டல அணிக்கு ஹர்பஜன் சிங் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேவாக், கம்பீர் விலகல் குறித்து வடக்கு மணடல அணித் தேர்வுக் கமிட்டி தலைவர் விக்ரம் ராத்தோர் தங்களிடம் கூறியதாக அணித் தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறும்போது:
“இன்று, அணித் தேர்வுக்குழு சந்திப்பின் போது, தேர்வுக்குழு தலைவர் விக்ரம் ராத்தோர் எங்களிடம் கூறும்போது, விரேந்திர சேவாக், அவரிடம் குறிப்பாக, தியோதர் கோப்பையில் தான் விளையாட விரும்பவில்லை என்று கூறியதாகத் தெரிவித்தார். கவுதம் கம்பீரும் தியோதர் கோப்பைப் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ஆனால் இருவரும் விலகியதற்கான காரணங்கள் தெரியவில்லை.” என்றார்.
மேலும், சேவாக், திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என்று கூறியதாக அந்த தேர்வுக்குழு உறுப்பினர் குறிப்பிட்டார்.
2015- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் தங்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்காது என்று தெரிந்தே இருவரும் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று இருவருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து வடக்கு மண்டல அணியில் ஹர்பஜன், யுவராஜ் சிங் தவிர மீதி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. உன்முக்த் சந்த் மற்றும் அதிரடி பஞ்சாப் வீரர் மனன் வோரா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று சேவாக் நினைத்திருக்கலாம். ஆனால் அது நிறைவேறாத காரணத்தினால் தியோதர் கோப்பையில் தான் விளையாட விரும்பவில்லை என்று கூறியிருக்கலாம் என்று டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT