Published : 15 Nov 2014 04:43 PM
Last Updated : 15 Nov 2014 04:43 PM
ராஞ்சியில் நாளை (ஞாயிறு) நடைபெறும் இலங்கைக்கு எதிரான 5-வது, இறுதி ஒருநாள் போட்டியில் ரெய்னாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 5-0 என்ற வெற்றி முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
வரும் நாட்களில் இந்திய அணி நிறைய கடினமான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவிருப்பதை அடுத்து சுரேஷ் ரெய்னாவுக்கு ஓய்வு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ரெய்னாவுக்க்கு பதிலாக வளரும் அதிரடி வீரர் கேதர் ஜாதவ் நாளை அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 போட்டிகளில் வென்று விட்டோம் என்று அலட்சியம் கூடாது என்றும் 5-0 என்ற வெல்ல போராட வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி அணியினரிடத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை அணி பீல்டிங்கிலும் சோடை போய் வருகிறது 4-வது போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு 4 ரன்களில் திசரா பெரெரா கோட்டை விட்ட கேட்ச் மற்றும் பிற கேட்ச்கள் தவறவிடப்பட்டதால் அவர் உலக சாதனை செய்ய முடிந்தது.
இவர் மட்டுமல்ல இந்தத் தொடரில் சதம் அடித்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு இலங்கை தொடக்கத்தில் கேட்ச் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் இந்தத் தொடரில் உமேஷ் யாதவ் சிறப்பாக விளங்குகிறார். அவர் இதுவரை 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவர் ஆஸ்திரேலியா தொடர் முதல் உலகக் கோப்பை வரை தேவை என்பதால் நாளைய போட்டியிலிருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோல் தொடர்ந்து சரியாக ஆடாமலேயே இந்திய அணியில் இடம்பெற்று வரும் ஜடேஜாவுக்கு சரியான சவால் கொடுக்கும் அக்சர் படேல் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை நல்ல சிக்கன விகிதத்தில் கைப்பற்றியுள்ளார்.
தவால் குல்கர்னி கடந்த போட்டியில் அருமையாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவர் டெஸ்ட் மேட்ச் பவுலர். ஆனாலும் இவரை இன்னும் சரியான முறையில் தோனி பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது.
தோனிக்காக ராஞ்சிக்கு இந்தப் போட்டி அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்தத் தொடரில் இல்லை.
ராஞ்சியில் 2 போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஒரு போட்டியில் இந்தியா வென்றுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா 296 ரன்கள் இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT