Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM

சென்னை ஓபனில் பங்கேற்பேன் வாவ்ரிங்கா உறுதி

சென்னை ஓபன் டென்னிஸில் பங்கேற்பேன் என்று தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா தெரிவித்துள்ளார்.

19-வது ஏர்செல் சென்னை ஓபன் போட்டி சென்னையில் டிசம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தியாவின் ஒரே ஏடிபி வேர்ல்ட் டூர் டென்னிஸ் போட்டியும் இதுதான்.

கடந்த ஆண்டு பிரான்ஸின் பெனோட் பைரேவுடன் இணைந்து இரட்டையர் பட்டத்தை வென்றார்.

அதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

தொடர்ந்து 6-வது ஆண்டாக அவர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். 27-வயதாகும் வாவ்ரிங்கா தனது நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரர் ரோஜர் பெடரருடன் இணைந்து 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். பெடரருடன் இணைந்த பல்வேறு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளது: 6-வது முறையாக சென்னை வந்து டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ரசிகர்கள் என்மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர் என்றார். தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் எம்.ஏ.அழகப்பன் கூறியது:

சென்னையில் அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் வாவ்ரிங்கா. இங்கு நடைபெறும் டென்னிஸ் போட்டியில் அவர் பங்கேற்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். போட்டியில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்து தெரிவிக்கிறேன் என்றார். -பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x