Published : 17 Aug 2014 12:35 PM
Last Updated : 17 Aug 2014 12:35 PM

மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா வெற்றி

இங்கிலாந்தின் வார்ம்ஸ்லே நகரில் நடைபெற்ற 4 நாள் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்தது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 92 ரன்களுக்கும், இந்தியா 114 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 96.3 ஓவர்களில் 202 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து வீராங்கனை குன் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியத் தரப்பில் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 181 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 3-வது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மிதாலி ராஜ், ஷிகா பாண்டே ஆகியோர் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தனர்.

4-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் மிதாலி ராஜும், ஷிகாவும் சிறப்பாக ஆட 95.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. மிதாலி ராஜ் 50, ஷிகா பாண்டே 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x