Published : 11 Apr 2025 08:39 AM
Last Updated : 11 Apr 2025 08:39 AM
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகி உள்ளதால் எம்.எஸ்.தோனி தலைமையில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய நிலையில் அதன் பின்னர் பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த 4 ஆட்டங்களிலும் இலக்கை துரத்தியிருந்தது.
இதில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தை தவிர்த்து மற்ற 3 ஆட்டங்களிலும் 180 ரன்களுக்கு மேலான இலக்கை துரத்த சிஎஸ்கே அணி சிரமப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 220 ரன்கள் இலக்கை போராட்ட குணத்துடன் சிஸ்கே எதிர்கொண்டு 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. டாப் ஆர்டரில் டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திராவும், நடுவரிசையில் ஷிவம் துபேவும் பார்முக்கு திரும்பி இருப்பது பலம் சேர்க்கக்கூடும். தோனியும் தாக்குதல் ஆட்டம் (12 பந்துகளில், 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள்) மேற்கொண்டுள்ளது அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதற்கிடையே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இதுதொடர்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “குவாஹாட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அதிக வலியுடனேயே அவர், அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடினார். எக்ஸ்ரே பரிசோதனையில் ருதுராஜின் காயம் குறித்து ஏதும் தெரியவில்லை.
ஆனால் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையில் அவரது முழங்கையில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர், தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம், அவருக்காக வருந்துகிறோம். விளையாட முயற்சிப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர், தொடரில் இருந்து வெளியேறுகிறார். இதனால் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்படுவார்” என்றார்.
ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். எனினும் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி புத்துணர்ச்சி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் பேட்டிங் உத்வேகம் பெற்ற நிலையில் பந்து வீச்சு, பீல்டிங்கிலும் சிஎஸ்கே அணி கூடுதல் கவனம் செலுத்தினால் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகக்கூடும். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரியன்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங் ஆகியோரது கேட்ச்களை தவறவிட்டதற்கான பலனை சிஎஸ்கே அணி அனுபவித்திருந்தது.
இதனால் பீல்டிங்கில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். வேகப்பந்து வீச்சில் கலீல் அகமதுவுக்கு உறுதுணையாக முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தினால் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முழுமையாக 4 ஓவர்களை நிறைவு செய்யாததும் பலவீனமாக பார்க்கப்படுகிறது. நூர் அகமதுவுக்கு இவர்கள் உறுதுணையாக செயல்பட்டால் அணி வெற்றிப்பாதைக்கு திரும்புவதற்கு வாய்ப்புகள் உருவாகக்கூடும். பேட்டிங் வரிசையில் ருதுராஜ் இடத்தில் தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சேம் கரண் ஆகியோரில் யாரேனும் ஒருவர் களமிறக்கப்படக்கூடும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. நடப்பு சீசனில் கொல்கத்தா அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 239 ரன்கள் இலக்கை துரத்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
பேட்டிங்கில் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர், சுனில் நரேன், ரிங்கு சிங், ரகுவன்ஷி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சுனில் நரேன், வருண்சக்கரவர்த்தி ஆகியோர் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா நம்பிக்கை அளிக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் மொயின் அலிக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
அஜிங்க்ய ரஹானே, மொயின் அலி ஆகியோர் ஏற்கெனவே சிஎஸ்கே அணிக்காக கடந்த சீசன்களில் விளையாடி உள்ளனர். இதனால் இவர்களது அனுபவம் இன்றைய ஆட்டத்தில் உதவக்கூடும். மேலும் அணியின் ஆலோசகரான டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணியில் நீண்ட காலம் இருந்துள்ளார். ஓய்வு பெற்ற பின்னர் உதவி பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார். இதனால் அவருடைய உள்ளீடுகளும் கொல்கத்தா அணிக்கு பயனளிக்கக்கூடும்.
தோனியும்.. கேப்டன்ஷிப்பும்… - 43 வயதான தோனி 2008 முதல் 2024 வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்தார். கடந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பொறுப்பு முழுமையாக ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னதாக 2022-ம் ஆண்டில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான தோல்விகளால் தொடரின் பாதியிலேயே ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் மீண்டும் தோனி கேப்டனாக வழிநடத்தினார். தற்போது ருதுராஜ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளதால் சிஎஸ்கேவுக்கு தலைமையேற்று வழிநடத்த உள்ளார் தோனி. அவரது தலைமையில் சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
ருதுராஜ் எப்போது காயமடைந்தார்? - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் தொடரில் 5 ஆட்டங்களில் முறையே 53, 0, 63, 5, 1 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் 63 ரன்கள் அவர், காயம் அடைந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேர்க்கப்பட்டதாகும். இந்த ஆட்டத்தில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் ருதுராஜ் காயம் அடைந்திருந்தார். அதன் பின்னர் அவர், விளையாடிய அடுத்த இரு ஆட்டங்களிலும் குறைந்த ரன்களில் நடையை கட்டியிருந்தார். முழங்கை காயத்தால் தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment