Published : 07 Apr 2025 07:43 AM
Last Updated : 07 Apr 2025 07:43 AM
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதவுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளைப் பெற்று மோசமான நிலையில் உள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றது. மற்ற ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வி கண்டுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 10 ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் குறைந்தது 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கெல்டன் ஒரு ஆட்டத்தில் மட்டுமே ஜொலித்தார். மற்ற ஆட்டங்களில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறத் தவறினார். நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
லக்னோவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. சூர்யகுமார் யாதவ், நமன் திர் ஆகியோர் அதிரடியாக விளையாடியபோதும் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா, மிட்செல் சான்ட்னர் ஆகியோரால் வெற்றியைப் பெற்றுத் தர முடியவில்லை.
இன்றைய ஆட்டத்தின்போது வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கெல்டன், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்பட்டால்தான் அந்த அணி வெற்றியை வசப்படுத்த முடியும். இன்றைய ஆட்டத்தில் காயமடைந்து மீண்டும் அணியில் இணைந்துள்ள நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா களமிறங்கக்கூடும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்குவது உறுதி என்று மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே அறிவித்துள்ளார். இதனால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மும்பை அணி பவுலிங்கில் டிரெண்ட் போல்ட், அஸ்வனி குமார், விக்னேஷ் புத்தூர், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர் ஆகியோரை நம்பியுள்ளது. கடந்த ஆட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த ஆட்டத்திலும் ஆர்சிபி அணி வீரர்களுக்கு பாண்டியா நெருக்கடி தரக்கூடும். ஜஸ்பிரீத் பும்ரா அணியினருடன் இணையும்போது அது மும்பை அணிக்கு புதிய தெம்பையும், உற்சாகத்தையும் அளிக்கும் என்று நம்பலாம்.
அதேநேரத்தில் பெங்களூரு அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முன்னேறியுள்ளது. பெங்களூரு அணிக்கு பிலிப் சால்ட், அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகின்றனர். அதேபோல் தேவ்தத் படிக்கல், கேப்டன் ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட் ஆகியோர் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அது மும்பை அணிக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். மேலும், பவுலிங்கில் ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், கிருணல் பாண்டியா, சுயாஷ் சர்மா ஆகியோரும் எதிரணி வீரர்களை மிரட்டுவதற்குக் காத்திருக்கின்றனர்.
மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுவதால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் களமிறங்குவாரா? - லக்னோ அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் மும்பை அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்திருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அவர் இம்பேக்ட் வீரராக கூட அணியில் சேர்க்கப்படவில்லை. இது மும்பை ரசிகர்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
எனவே, இன்றைய ஆட்டத்தில் அவர் அணியில் சேர்க்கப்படுவாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அணி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை. கடைசி நேர மாற்றங்கள் மூலம் ரோஹித் சர்மா அணிக்குள் வர வாய்ப்புள்ளதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment