Published : 06 Apr 2025 09:52 AM
Last Updated : 06 Apr 2025 09:52 AM

ரிட்டயர்டு அவுட் முறையில் திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? - ஜெயவர்த்தனே விளக்கம்

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. 204 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. ஒரு கட்டத்தில் மும்பை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 61 ரன்கள் தேவையாக இருந்தது.

நவீன கால டி20 கிரிக்கெட்டில் இந்த ரன்கள் அடிக்கப்படக்கூடியதே. ஆனால் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 67 ரன்கள் விளாசிய நிலையில் அவேஷ் கான் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் வழக்கத்துக்கு மாறான ஷாட்டை விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும் இந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. ராதீ வீசிய அடுத்த ஓவரில் 11 ரன்கள் கிடைக்கப்பெற்றன. 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில் திலக் வர்மா ரன்கள் சேர்க்க தடுமாறிக் கொண்டிருந்தார். ஷர்துல் தாக்குர் வீசிய 19-வது ஓவரின் 5-வது பந்தில் திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டார்.

இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்தது. திலக் வர்மா 23 பந்துகளில், 25 ரன்கள் எடுத்திருந்தார். அணி நிர்வாகம் அவரை களத்தில் இருந்து வெளியே எடுத்ததால் மிகுந்த வருத்தத்துடன் நடையை கட்டினார். அந்த சூழ்நிலையில் மும்பை அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவையாக இருந்தன. திலக் வர்மாவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட மிட்செல் சாண்ட்னர் அந்த ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவையாக இருந்தன. முதல் பந்தில் சிக்ஸரும், அடுத்த பந்தில் 2 ரன்களையும் சேர்த்த ஹர்திக் பாண்டியாவால் அடுத்த 3 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 191 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

போட்டி முடிவடைந்ததும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கூறும் போது, “ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் திலக் வர்மா சிறப்பாக பேட் செய்தார். 3-வது விக்கெட்டை நாங்கள் இழந்ததும் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர் அடித்து விளையாட விரும்பினார். இருப்பினும் முடியவில்லை. இறுதி வரை இருந்து ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினார்.

எங்களுக்கு கடைசி சில பந்துகளில் புத்துணர்ச்சியுடன் காணப்படும் வீரர்கள் களத்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. அதனால் திலக் வர்மாவை வெளியே எடுக்கும் உத்தியை கையாண்டோம். இது கிரிக்கெட்டில் நடக்கும். இருப்பினும் அவரை வெளியேற்றியது சிறப்பானது அல்ல. ஆட்டத்தின் சூழலை கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x