Published : 20 Mar 2025 07:10 AM
Last Updated : 20 Mar 2025 07:10 AM

பும்ரா இல்லாதது சவாலாகவே இருக்கும்: சொல்கிறார் ஜெயவர்தனே

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவுடன் மோத உள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா முதற்கட்ட ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ஜஸ்பிரீத் பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர், தற்போது பெங்களூருவில் பிசிசிஐ சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். போட்டிகளில் விளையாடுவதற்கான முழு உடற்தகுதியை பும்ரா இன்னும் அடையவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே கூறும்போது,“ ஜஸ்பிரீத் பும்ரா தற்போது பிசிசிஐ சிறப்பு மையத்தில் உள்ளார். அவர்களின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தற்போதைய நிலையில் நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது, தினசரி அடிப்படையில் முன்னேற்றம் உள்ளது. பும்ரா நல்ல மனநிலையில் இருக்கிறார், அவர் இல்லாதது ஒரு சவாலாகவே இருக்கும். ஏனெனில் அவர், உலகின் சிறந்த பந்துவீச்சாளர்” என்றார்.

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது,“என்னுடன் ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய மூன்று கேப்டன்கள் இணைந்து விளையாடுவது எனது அதிர்ஷ்டம். அவர்கள் எப்போதும் என் தோளைச் சுற்றி ஒரு கையை வைப்பார்கள், எனக்கு ஏதேனும் உதவி தேவைப்படும்போது அங்கே இருப்பார்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x