Published : 06 Mar 2025 08:09 AM
Last Updated : 06 Mar 2025 08:09 AM
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அரை இறுதி ஆட்டத்தில் 84 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 747 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேவேளையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 2 இடங்களை இழந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஷுப்மன் கில் 791 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். விராட் கோலிக்கும், கில்லுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 44 ஆக உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் ஹன்ரிச் கிளாசன் ஒரு இடம் முன்னேறி 760 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் அஸம் 770 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறார்.
இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயர் 702 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் ஸத்ரன் 13 இடங்கள் முன்னேறி 676 புள்ளிகளுடன் 10-வது இடத்தை அடைந்துள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment