Published : 22 Feb 2025 04:14 PM
Last Updated : 22 Feb 2025 04:14 PM

“இந்திய அணியை இங்கு அடுத்தடுத்து தோற்கடித்துள்ளோம்” - பாக். வீரர் ரவூஃப் எச்சரிக்கை

துபாய்: நாளை துபாயில் இந்தியா - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பெரிய எதிர்பார்ப்பை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப், “இங்கு இந்திய அணியை அடுத்தடுத்து தோற்கடித்துள்ளோம் என்பது நினைவிருக்கட்டும்” என்று எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் கடும் அழுத்தத்தில் இறங்குகிறது. ஏனெனில் முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக தோல்வி கண்டதால் இந்திய அணியை வீழ்த்தியே ஆக வேண்டிய நெருக்கடி உள்ளது, இல்லாவிட்டாலும் இந்தியாவை வென்றாலே கோப்பையை வென்ற மகிழ்ச்சியடைவதுதான் அவர்கள் வழக்கம். எப்படி இருந்தாலும் கடும் பிரஷரில் பாகிஸ்தான் இறங்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க நியாயமில்லை.

இந்நிலையில், 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதையும், 2022 ஆசியக் கோப்பைப் போட்டியில் இதே மைதானத்தில் வீழ்த்தியதையும் ஹாரிஸ் ரவூஃப் நினைவுறுத்தி இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஹாரிஸ் ரவூஃப் கூறும்போது, “நிச்சயமாக இந்த வெற்றிகள் எங்கள் நம்பிக்கைக்கு உரம் போன்றது. தொடர்ந்து இரு ஆண்டுகள் இங்கு இந்திய அணியை தோற்கடித்துள்ளோம். அந்த வெற்றிகளின்போது செய்த நல்ல விஷயங்களை மீண்டும் செய்து இந்த முறையும் வெல்ல முயற்சி செய்வோம்.

ரெக்கார்ட் நன்றாகத்தான் உள்ளது. பிட்ச் தான் முக்கியம். ஸ்பின் பிட்ச் என்றுதான் நினைக்கிறேன். கண்டிஷன் என்ன என்று பார்த்து அதை நன்றாகப் பயன்படுத்துவோம். எல்லோரும் கூறுவது போல் எங்களுக்கு எந்த பிரஷரும் இல்லை. ரிலாக்ஸாக இருக்கிறோம், பாசிட்டிவ் மன நிலையில் இருக்கிறோம். மற்ற போட்டிகளைப் போலவேதான் அணுகுகிறோம், இந்தியா என்பதற்காக எந்தவித அழுத்தமும் இல்லை. வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழையப் பாடுபடுவோம்” என்று ஹாரிஸ் ரவூஃப் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x