Published : 31 Jan 2025 05:39 AM
Last Updated : 31 Jan 2025 05:39 AM

இங்கிலாந்துடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: மீண்டெழுமா இந்திய அணி?

புனே: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் அந்த அணி தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்துள்ளது. தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்க்கும் 4-வது ஆட்டம் இன்று இரவு புனேவில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி டி20 தொடரை 3-1 தன்வசப்படுத்தும். ராஜ்கோட்டில் இந்திய அணி பேட்டிங்கில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறியது. தொடக்க வீரரான சஞ்சு சாம்சனிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. 3 ஆட்டங்களிலும் அவர், முறையே 26, 5, 3 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன், ஷாட்பாலில் விக்கெட்டை பறிகொடுப்பது தொடர் கதையாக உள்ளது. மேலும் 145 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வீசப்படும் பந்துகளில் தடுமாறுகிறார்.

ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துகளை வீசுவதால் அவர்கள், சாம்சனுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதில் இருந்து வெளியே வந்து அவர், ரன்கள் குவிப்பதற்கான வழியை அவர், கண்டறிய வேண்டும். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா முதல் போட்டியில் 34 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். ஆனால் அடுத்த இரு ஆட்டங்களிலும் முறையே 12, 24 ரன்களில் வெளியேறினார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு செயல்படுவதில் அவர், கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் இருந்து அதிரடியான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. 3 ஆட்டங்களில் அவர், கூட்டாக 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. துருவ் ஜூரெல் நீக்கப்பட்டு, ரிங்கு சிங் அல்லது ஷிவம் துபே சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அர்ஷ்தீப் சிங் அணிக்கு திரும்பக்கூடும். இது நிகழும் பட்சத்தில் வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவி பிஷ்னோய் நீக்கப்படக்கூடும். வருண் சக்கரவர்த்தி மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ராஜ்கோட் போட்டியில் எழுச்சி கண்டிருந்தது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தியிருந்தது. பேட்டிங்கில் பென் டக்கெட் தொடக்கத்திலும், லியாம் லிவிங்ஸ்டன் இறுதிக்கட்டத்திலும் அதிரடியாக விளையாடி பலம் சேர்த்திருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் டி 20 தொடரை இங்கிலாந்து அணி இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் முனைப்புடன் செயல்படக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x