Published : 09 Dec 2024 07:58 PM
Last Updated : 09 Dec 2024 07:58 PM

டிங் லிரெனிடம் 12-வது சுற்றில் குகேஷ் தோல்வி - மீண்டும் சமநிலை

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 12-வது சுற்றில், டிங் லிரெனிடம் குகேஷ் தோல்வி கண்டார். இதனால், போட்டி மீண்டும் 6-6 என சமநிலையை எட்டி உள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.

இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று தொடர்ச்சியான டிராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் 6 புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தார். இந்நிலையில், இன்று 12-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. டிங் லிரென் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடன் விளையாடினார்கள். 39-வது நகர்த்தலின் போது டிங் லிரென் வெற்றி பெற்று அசத்தினார்.

இதன் மூலம் லிரென் முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார். முக்கியமான கட்டத்தில் அவர், பெற்ற இந்த வெற்றியால் போட்டி மீண்டும் 6-6 என சமநிலையை எட்டி உள்ளது. இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ளன. நாளை (டிச.10) ஓய்வு நாளாகும். நாளை மறுநாள் நடைபெறும் 13-வது சுற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

12-வது சுற்றுக்கு பின்னர் குகேஷ் கூறும்போது, “இரண்டாவது பாதியில், பல ஆட்டங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் 12-வது சுற்றில் மோசமாக விளையாடி விட்டேன். இங்கிருந்து டிராவுக்கு செல்ல மாட்டேன். மோசமான விளையாட்டுகள் நிகழவேச் செய்யும். ஆனால் ஒட்டுமொத்தமாக இரண்டாவது பாதியில், நானும் டிங் லிரெனும் முதல் பாதியை விட சிறப்பாக விளையாடுகிறோம் என்றே நினைக்கிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x