Published : 30 Oct 2024 05:04 PM
Last Updated : 30 Oct 2024 05:04 PM
பெங்களூரு: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி கேப்டன்சி தொடர்பாக ஷுப்மன் கில்லுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் ஒரு சில ஊடக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
விராட் கோலி 2013 முதல் 2021 வரை ஆர்சிபி கேப்டனாக இருந்தார். பிறகு கேப்டன்சியை உதறினார். 2022 முதல் 2024 வரை ஆர்சிபி கேப்டனாக ஃபாப் டு பிளெசிஸ் நீடித்தார். இந்நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலியை மீண்டும் கேப்டனாக்குவது என்று ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 2021 சீசன் முடிவதற்கு முன்பு ஆர்சிபி கேப்டன் பொறுப்பை உதறுவதாக கோலி அறிவித்தார். இவரது தலைமையின் கீழ் ஆர்சிபி ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை என்ற அதிருப்தி நிலவி வந்தது. ஆனால், கோலியை மாற்றி வேறு கேப்டன் நியமிக்கப்பட்ட போதும் ஆர்சிபி-யின் தோல்வி முகம் நீடிக்கவே செய்கிறது.
விராட் கோலி ஆர்சிபி கேப்டனாகிறார் என்ற செய்தியும், ஃபாப் டு பிளெசிஸ் அணியில் தக்க வைக்கப்பட மாட்டார் என்ற செய்தியும் இணைந்தே கவனிக்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில்லை ஆர்சிபி அணிக்கு இழுத்து கேப்டன்சியை அவர் தலையில் கட்டலாம் என்று ஆர்சிபி அணி நிர்வாகம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட அக்டோபர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கொல்கத்தாவைச் சாம்பியன்களாக்கிய அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொல்கத்தாவில் நீடிக்கப்போவதில்லை என்ற செய்திகளும் வெளிவந்துள்ளது. அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை தக்கவைத்து அவரிடம் கேப்டன்சி அளிக்கலாம் என்ற பேச்சுக்களும் ஐபிஎல் வட்டாரங்களில் எழுந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment