Published : 28 Oct 2024 02:34 PM
Last Updated : 28 Oct 2024 02:34 PM
கடந்த ஏப்ரல் 2024-ல் பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிர்ஸ்டன் 6 மாதங்களிலேயே வெறுத்துப் போய் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை உதறித்தள்ளி விட்டார்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் வெள்ளைப் பந்து தொடருக்கு ஜேசன் கில்லஸ்பி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். கேரி கிர்ஸ்டன் தன் ராஜினாமா கடிதத்தை அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த கையோடு ஜேசன் கில்லஸ்பியை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது கேரி கிர்ஸ்டன் பயிற்சிப் பொறுப்பு கடும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காரணம், அவரது பயிற்சியில் பாகிஸ்தான் குரூப் ஸ்டேஜைத் தாண்டவில்லை என்பதே கசப்பான உண்மை. கேரி கிர்ஸ்டன் பெரிய வெற்றிகளைக் கண்ட ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இல்லாமல் விலகியுள்ளார். 2011-ல் இந்தியா உலகக் கோப்பையை தோனி தலைமையில் வென்றபோது கேரி கிர்ஸ்டன் தான் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் கேரி கிர்ஸ்டனுக்கும் அபிப்ராய பேதங்கள் ஏற்பட்டு வந்தன. அணித் தேர்வுகளில் கேரி கிர்ஸ்டனோ, ஜேசன் கில்லஸ்பியோ தலையிட முடியாத அளவுக்கு பரிந்துரைகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு இரும்புத்திரைப் போடப்பட்டதுதான் கேரி விலகலுக்குக் காரணம் என்கின்றனர்.
மேலும் கிர்ஸ்டனுக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்குமே ஒத்துப் போகவில்லை. டேவிட் ரீட் என்பவரை ஹை பெர்பார்மன்ஸ் கோச் ஆக நியமிக்குமாறு கிர்ஸ்டன் எத்தனை முறை கேட்டுக் கொண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செவி சாய்க்கவில்லை இது இரு தரப்பினருக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிப் பயிற்சியாளர் குழுவில் ஆகிப் ஜாவேத் இணைவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment