Published : 26 Oct 2024 11:49 AM
Last Updated : 26 Oct 2024 11:49 AM

ஃபுல்டாஸில் போல்டு ஆகிறாரே... - விராட் கோலி குறித்து மஞ்சுரேக்கர் கவலை

ஒரு காலத்தில் நம்பர் 1 பேட்டராகத் திகழ்ந்த விராட் கோலி கடைசியில் ஒரு தாழ்வான ஃபுல்டாசைக் கூட சரியாகக் கணிக்க முடியாமல் ஸ்கூல் கிரிக்கெட்டர் போல் போல்டு ஆகி வெளியேறியது கவலையளிப்பதாக இருப்பதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியதாவது: “புனே டெஸ்ட் போட்டியில் கோலி ஆடிய ஷாட் தேர்வை விடவும் மோசமானது அவரது பந்து பற்றிய கணிப்பு. இதுதான் எனக்குக் கவலையளிக்கிறது. பந்தின் லெந்த்தைக் கணிப்பது விராட் கோலிக்குப் பிரச்சனையாக இருந்து வருவதைப் பார்க்கின்றேன். அவ்வளவு ஃபுல் லெந்த்தாக இல்லாத பந்துகளுக்கும் கோலி முன்னால் காலை நீட்டி ஆடுவது குறித்து லட்சம் முறை நான் பேசிவிட்டேன்.

லெந்த்திற்கு அவரது வினையாற்றுதல் இப்படியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்பின்னுக்கு எதிராக நன்றாகவே கணித்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த முறை லெந்த்தை முழுக்கவுமே கோட்டை விட்டார். பந்து அவரது மட்டைக்கும் கீழ் பிட்ச் ஆனது போல் தெரிகிறது. அவரோ ஸ்வீப் ஷாட்டுக்குப் போனார், ஸ்டம்புகளை இழந்தார். இது அவரது ஷாட் தேர்வை விட ஃபுல்டாசை விட்டார் பாருங்கள் அதுதான் கவலையளிக்கிறது.

வேகப்பந்து வீச்சாளர்களிடத்தில் அவருக்கு இருந்து வரும் அதே பிரச்சனை இப்போது ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. முன் கால்காப்பு லைனுக்கு வருகிறது அவரோ லைனுக்கு வெளியே பந்தை ஆட முயல்கிறார். இப்படி இவர் இந்தத் தொடரில் இரண்டாவது முறை ஆட்டமிழக்கிறார். இதே பிரச்சினை அவருக்கு ஏற்கெனவே இருந்துள்ளது.” இவ்வாறு கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.

விராட் கோலி லண்டனிலிருக்கிறார், தொடரின் போது வருகிறார், அதனால் அவரது தினசரிப் பேட்டிங் பயிற்சி எப்படி என்பதெல்லாம் தெரியவில்லை. கடந்த கால பிரபல்யத்தில் அவர் இன்னமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீடிப்பதாகவே தெரிகிறது.

ராகுல் திராவிட் தான் ஓய்வு அறிவித்ததற்கான காரணத்தைத் தெரிவிக்கும் போது, ‘பந்து டிம்பரில் படும் ஓசை எனக்கு நாராசமாகக் கேட்கிறது’ என்றார். ஒரு நல்ல பேட்டரின் நுண் உணர்வுத்திறன் ஆகும் இது. ஏனெனில் அப்போது ராகுல் திராவிட் அடிக்கடி போல்டு ஆனார் என்பதைத்தான் அவர் இப்படிக் குறிப்பிட்டார். விராட் கோலியும் நல்ல பேட்டர் தான், ஆனால் தான் ஓய்வு பெறும் தருணம் எப்போது என்பதை அவரது நுண் உணர்வுத்திறன் இன்னும் அவருக்கு உணர்த்தவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x