Published : 13 Oct 2024 01:54 PM
Last Updated : 13 Oct 2024 01:54 PM

சுயநலமற்ற வீரர்கள்தான் என் அணிக்குத் தேவை - சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

மட்டையாளர்களின் சொர்க்கம், ஹை ஸ்கோர் ரப்பர் பந்து பிட்ச் ஆகிய ஹைதராபாத் மைதானத்தில் வங்கதேசத்தை பல பேட்டிங் சாதனைகளுக்கு இடையில் வென்று தொடரை 3-0 என்று கைப்பற்றியதையடுத்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தன் அணியில் சுயநலமற்ற வீரர்களுக்குத்தான் இடம் என்று கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் ஒரு தரமான கிரிக்கெட் வீரர் என்பதோடு காட்டடி மன்னன் என்பதையும் நிரூபித்தது, 29 பந்துகளில் 62 என்று அதிரடி காட்டியவர் ஐந்தே பந்துகளில் 92 ரன்களுக்குச் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எப்படி எனில் 10வது ஓவரை வீசிய வங்கதேச ஸ்பின்னர் ரிஷாத் ஹுசைனை 5 சிக்சர்கள் விளாசி பின்னி எடுத்து 40 பந்துகளில் சதம் விளாசினார். இந்திய வீரர் ஒருவரின் 2வது அதிவேக டி20 சதமாகும் இது.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியதாவது: ஒரு அணியாக நிறைய சாதித்திருக்கிறோம். முக்கியமாக தொடரின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட போது என் அணியில் தன்னலமற்ற வீரர்கள் வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஹர்திக் பாண்டியா சொல்வது போல் தன்னலமற்ற, பரஸ்பரம் ஒருவர் ஆட்டத்தை மற்றவர்கள் மகிழ்வுடன் வரவேற்கும் மன நிலையே தேவை என்று கூறுவேன்.

களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இதே பரஸ்பர உறவுகள், சகோதரத்துவம் தொடர்வதையும் விரும்புகிறேன். இப்படிப் பட்ட மன நிலை வந்து விட்டால் மைதானத்தில் கேளிக்கை தவிர வேறெதுவும் இருக்காது.

கவுதம் கம்பீர் சொல்வார், ‘அணியை விட எந்த ஒரு தனி வீரரும் பெரிய ஆள் கிடையாது’ என்று. ஒரு பேட்டர் 99 ரன்களில் இருந்தாலும் 49 ரன்களில் இருந்தாலும் அடிக்க வேண்டிய பந்தை அடித்து, மைதானத்திற்கு வெளியே அடிக்க வேண்டிய பந்தாக இருந்தால் மைதானத்துக்கு வெளியே அனுப்ப வேண்டியதுதான். சஞ்சு அதைத்தான் செய்தார், அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தேவைப்பட்டால் பந்து வீச வேண்டும். வெற்றி என்னும் நல்ல பழக்கத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு கூறினார் சூரிய குமார் யாதவ்.

இந்தியாவின் அடுத்த டி20 தொடர் நவம்பர் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. அதே வேளையில் பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக இந்திய டெஸ்ட் அணி தயாரிப்பில் இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x