Published : 09 Oct 2024 08:44 AM
Last Updated : 09 Oct 2024 08:44 AM

2-வது ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

புதுடெல்லி: இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை தன்வசப்படுத்தும்.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் குவாலியரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 128 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 11.5 ஓவர்களிலேயே இலக்கை வெற்றிகரமாக எட்டியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 எனமுன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டம் டெல்லிஅருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

முதல் போட்டியில் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி அனைத்து துறையிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் மயங்க் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். அறிமுக வீரராக மயங்க் யாதவ்தனது முதல் ஓவரையே மெய்டனாக வீசியிருந்தார். இந்த பந்து வீச்சு குழுவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 29 ரன்களும், அபிஷேக் சர்மா 16 ரன்களிலும் வெளியேறிருந்தனர். இவர்கள் இருவரும் தங்களுக்குகிடைத்த வாய்ப்பை இன்றைய ஆட்டத்தில் மேலும்சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டக்கூடும்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, நித்திஷ் ரெட்டி ஆகியோர் சிறந்த பார்மில் இருப்பதால் இன்றையஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில் பெரிய அளவில் ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது.

இவர்களுடன் ரியான் பராக், ரிங்குசிங் ஆகியோரும் பின்வரிசையில் மட்டையை சுழற்றக்கூடிய வர்கள். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்திய அணி தொடரைகைப்பற்றும். இதனால் இந்திய அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.

நஜ்முல் ஹொசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும்.இதனால் அந்த அணி வெற்றிக்காக போராட முயற்சிக்கக்கூடும். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் பலர் இருந்தாலும் டி 20 வடிவத்துக்கான ஆக்ரோஷ அணுகுமுறை அவர்களிடம் இல்லாதது குறையாக உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமானால் வங்கதேச அணி அனைத்து துறையிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x