Published : 27 Sep 2024 10:46 AM
Last Updated : 27 Sep 2024 10:46 AM

‘ரிஷப் பந்த் ஆஸ்திரேலியராக இருந்திருக்கலாம்’ - மிட்செல் மார்ஷ் விருப்பம்

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 624 ரன்களை 62.40 என்ற சராசரியில் எடுத்துள்ளார் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த். இதனையடுத்து அவர் ஆஸ்திரேலியராக இருந்திருக்கலாம் என மிட்செல் மார்ஷ் புகழாரம் சூட்டி தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மனநிலை என்பது எதிரணியினரை லேசாக கிண்டல் கேலி செய்வதுடன் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை ஆடுவது, கடினமாகப் பயிற்சி செய்வது, போட்டித்தன்மையுடன் விட்டுக் கொடுக்காமல் ஆடுவது, இவை அனைத்தும் ரிஷப் பந்த் இடமிருப்பதாக ஆஸ்திரேலிய வீரர்களே உணர்ந்திருக்கின்றனர்.

கடந்த ஆஸ்திரேலியத் தொடரில் ரிஷப் பந்த், சிட்னியில் ஆஸ்திரேலியாவின் 400-க்கு மேலான இலக்கை விரட்டி விடும் அச்சுறுத்தல் இன்னிங்ஸை ஆடி ஆஸ்திரேலியாவை கதிகலங்கச் செய்யும் சதம் விளாசினார், பிரிஸ்பனில் இலக்கை விரட்டி சாதித்தே காட்டி விட்டார்.

ஆஸ்திரேலியாவில் ரசிகர்கள், ரிச்சி பெனோ, இயன் சாப்பல் உள்ளிட்ட கிரிக்கெட் வல்லுநர்கள் முன்னாள் வீரர்கள் அதிகம் விரும்பும் இந்திய கிரிக்கெட் வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான். ஆனால், தான் விளையாடும் காலத்திலேயே சக ஆஸ்திரேலிய வீரர்களின், புதிய வர்ணனையாளர்களின், விருப்பத்துக்குரிய வீரர் என்றால் அது விராட் கோலி. இப்போது ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய அணிக்குள்ளேயே அச்சமூட்டும் ஒரு வீரராக எழுச்சி பெற்றுள்ளார் என்றால் மிகையாகாது.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் மிட்செல் மார்ஷ் கூறும்போது, “ரிஷப் பந்த் கிழிகிழி என்று கிழிக்கும் ஒரு வீரர். கடந்த சில ஆண்டுகளாக சொந்த வாழ்க்கையில் இடர்பாடுகளை எதிர்கொண்டவர். விபத்திலிருந்து மீண்டு வந்து இப்படி ஆடுவது உண்மையில் பெரிய விஷயம். பாசிட்டிவ் ஆன நபர். அவருக்கு வெற்றி பெறுவதுதான் பிடிக்கும்.

எப்போதும் சிரித்துக் கொண்டும், கேலி பேசிக்கொண்டும், ரிலாக்ஸாக இருக்கும் ரிஷப் பந்த் போன்ற ஒரு வீரர் ஆக்ரோஷமானவராகவும் போட்டித்தன்மை நிரம்பியவராகவும் இருக்கிறார். அவரிடம் பெரிய ‘சிரிப்பு’ இருக்கிறது. அவர் ஆஸ்திரேலியராக இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

ரிஷப் பந்த் போலவே அதிரடி கிரிக்கெட்டைக் கையில் எடுத்துள்ள ஆஸ்திரேலிய இடது கை வீரர் ட்ராவிஸ் ஹெட், “ஆஸ்திரேலியர் போலவே ஆடும் ஒரு இந்திய வீரர் என்றால் அது ரிஷப் பந்த் என்றுதான் நானும் கருதுகிறேன். அவருடன் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கக் கூடியது” என்றார்.

ஏற்கெனவே இயன் சாப்பல், ஆஸ்திரேலியாவுக்கு ரிஷப் பந்த் எப்படி ஒரு அச்சுறுத்தல் என்பதை விளக்கி பத்தி எழுதியிருந்ததை சுட்டியிருக்கிறோம். ஆகவே ரிஷப் பந்தின் மீட்டெழுச்சி ஆஸ்திரேலியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியுள்ளது என்றால் மிகையாகாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x