Published : 17 Sep 2024 01:04 PM
Last Updated : 17 Sep 2024 01:04 PM

முதல் டெஸ்ட்: சேப்பாக்கம் பிட்ச் எப்படி? - 5வது பவுலர் ஸ்பின்னரா, வேகப்பந்து வீச்சாளரா?

நாளை மறுநாள் (செப்.19, வியாழன்) சென்னை சேப்பாக்கத்தில் வங்கதேச அணிக்கும் இந்திய அணிக்கும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. வழக்கம் போல் பிட்ச் எப்படி இருக்கும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

ஏனெனில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற ‘SENA' நாடுகளுக்குப் போடப்படும் குழிபிட்ச் ரகத்தை இவர்களிடம் காட்டினால் நம்முடைய இப்போதைய பேட்டர்களுமே சடுதியில் பெவிலியன் திரும்பி விடுவார்கள், காரணம் வங்கதேச அணியில் நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர்.

சேப்பாக்கம் பிட்ச் எப்போதும் மூன்று, மூன்றரை நாட்கள் தாங்கும். இந்த முறை பிட்ச் சிகப்புத் தரையாகக் காட்சியளிப்பதால் மூன்று ஸ்பின்னர்களா அல்லது மூன்று வேகப்பந்து வீச்சாளர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடும் வெயில் அடித்துக் கொண்டிருப்பதால் தண்ணீர் பாய்ச்சி ஆட்டக் களத்தை இறுகச் செய்யாவிட்டால், 2ம் நாள், ஏன் முதல் நாளே பிட்ச் உடைந்து விடும். எனவே கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக டெஸ்ட் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வேகப்பந்து வீச்சுதான் தொடர்ந்து இந்த டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதோடு ரிவர்ஸ் ஸ்விங் நல்ல அளவில் ஆகும் என்றும் கணித்துள்ளனர். பவுலிங்கைப் பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ், அஸ்வின், ஜடேஜா அணியில் நிச்சய நிரந்தரம். ஐந்தாவது பவுலர் இடம் ஒரு வேகப்பந்து வீச்சாளாருக்கா அல்லது அக்சர் படேல், குல்தீப் இடையே போட்டியா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஆகாஷ் தீப் ஒரு அருமையான வேக-ஸ்விங் பவுலர் அவருக்கு வாய்ப்பளிக்காமல் இருந்தால் அது பின்னடைவை ஏற்படுத்தி விட்டால் நிச்சயம் கம்பீர் அண்ட் கோ மீது விமர்சனக்கணைகள் பாயும்.

2019-ல் வங்கதேச ஸ்பின் பலங்களை எண்ணி சற்றே அஞ்சி கொல்கத்தாவில் வேகப்பந்து ஆட்டக்களத்தைப் போட்டது பிசிசிஐ. அப்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் வைத்திருந்தனர். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது இந்தியக் குழிப்பிட்ச்களில் வழக்கமில்லை. அப்படி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் பிட்ச் வேகப்பந்துக்குச் சாதகமானது என்று பொருள்.

மேலும், ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவிருப்பதால் அங்கு மூன்று வேகப்பந்து வீச்சு, ஏன் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் கூட தேவைப்படலாம். அதற்கான மேட்ச் பிராக்டீஸாக இந்த சென்னை டெஸ்ட் போட்டியில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளராக யஷ் தயாள் சேர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது.

ஆஸ்திரேலியா தொடரைக் கருத்தில் கொண்டு வங்கதேசம் மற்றும் இதற்கு அடுத்தபடியான நியூஸிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கு பிசிசிஐ வேகப்பந்து ஆடுகளமே போடும் என்று எதிர்பார்க்கலாம் என்ற பேச்சு அடிபட்டாலும், வங்கதேசத்துக்கு எதிராக ஸ்பின் பிட்ச் அல்லது குழிப்பிட்சைப் போட்டால் நமக்கே டேஞ்சராகிவிடும் என்ற எண்ணமே வேகப்பந்து தெரிவுக்கு இட்டுச் செல்கிறது என்று கூறலாம். மேலும் அடுத்த டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது, அந்தப் பிட்ச் பெரும்பாலும் ஸ்பின் பிட்சாக இருக்கும் என்பதால் இந்த டெஸ்ட்டிலேயே 3வது வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x