Published : 16 Sep 2024 07:39 PM
Last Updated : 16 Sep 2024 07:39 PM

தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேற்றம் | ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இன்று நடைபெற்ற 2-ஆவது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது.

இதில் இந்தியாவின் உத்தம் சிங் 13-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். அடுத்து ஹர்மன்பிரீத் சிங் 19 மற்றும் 45-வது நிமிடத்தில் இரண்டு கோல் அடித்து வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். 32-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை ஜர்மன்ப்ரீத் கோலாக மாற்றியது இந்தியாவுக்கு பலமாக அமைந்தது. இந்தியாவை சமாளிக்க முடியாமல் தென் கொரிய அணி திணறியது. 32-வது நிமிடத்தில் யாங் ஜிஹுன் ஒரு கோல் மட்டுமே அடிக்க, அதன் பின் அந்த அணியிலிருந்து எந்த கோலும் வரவில்லை. இந்நிலையில், 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. செவ்வாய்கிழமை (செப்.17) நடைபெறும் இறுதிப் போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x