Published : 04 Sep 2024 05:16 AM
Last Updated : 04 Sep 2024 05:16 AM

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 17-வதுபாராலிம்பிக் போட்டியில், பெண்கள் பேட்மிண்டன் ஒன்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலமும் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இவர்களுக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், வெண்கலம் வென்ற மனிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீ சிவன்ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களது அர்ப்பணிப்பும்,மனவலிமையும், லட்சக்கணக்கானோரை ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த வெற்றி தேசத்துக்கு பெருமைசேர்த்துள்ளது. எப்போது ஜொலித்துக்கொண்டே இருங்கள்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: பாரிஸ் நகரில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ சிவன் ஆகியோர் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுஅசத்தியுள்ளனர். சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாதனை படைத்திருக்கும் நமது வீராங்கனைகளுக்கு எனது பாராட்டுக்கள்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகவீராங்கனை துளசிமதி, வெண்கலம் வென்ற மணிஷா ஆகியோருக்கு எனது பாராட்டுகள். தமிழகத்தின் பெருமையை உலகளவில் உயர்த்திய இருவரும் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.

பாமக தலைவர் அன்புமணி: பாராலிம்பிக் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மணிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீ சிவன் ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள். இனிவரும் காலங்களில் உலக அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் தமிழக வீராங்கனைகள் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களது வெற்றியால்தமிழக மக்கள் பெருமையடைந்துள்ளனர். தமிழக விளையாட்டு வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: பாராலிம்பிக் போட்டியில் தமிழகவீ ராங்கனைகள் வெள்ளிப் பதக்கமும், வெண்கலமும் வென்றிருப்பது மிகுந்த மனமகிழ்வை தருகிறது. பிறந்த மண்ணுக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ள தமிழக வீராங்கனைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு சரித்திர வெற்றியை பதிவு செய்து நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கும் தமிழக வீராங்கனைகளின் சாதனைபயணம் மென்மேலும் தொடரட்டும்.

வி.கே.சசிகலா: பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள தமிழக வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x