Published : 28 Aug 2024 08:18 AM
Last Updated : 28 Aug 2024 08:18 AM

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் இன்று கோலாகல தொடக்கம்: இந்தியாவில் இருந்து 84 பேர் பங்கேற்பு

பாரிஸ் பாராலிம்பிக்ஸில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள்.

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 169 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல போராட உள்ளனர்.

இந்த விளையாட்டு திருவிழாவில் இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் 12 வகையிலான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்திய அணியானது அனுபவம் மற்றும் இளம் வீரர்களை உள்ளடக்கிய கலவையாக உள்ளது. பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் இருந்து அதிகமானோர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் டோக்கியோ பாரலிம்பிக்கிஸில் 54 பேர் பங்கேற்றிருந்தனர்.

அதில் இந்தியா 5 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தது. பதக்க பட்டியலில் 24-வது இடத்தையும் பிடித்திருந்தது. இம்முறை இந்தியா 25 பதக்கங்களுக்கு மேல் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஹாங்ஸோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 29 தங்கம் உட்பட 111 பதக்கங்களை வேட்டையாடி வரலாற்று சாதனை படைத்திருந்தது.

தொடர்ந்து உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம் உட்பட 17 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 6-வது இடம் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஹாங்ஸோ பாரா ஆசிய விளையாட்டில் பங்கேற்ற பெரும்பாலான வீரர்களே பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.

சுமித் அன்டில்: உலக சாதனையாளரான ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனிலேகரா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர். இவர்களுடன் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, குண்டு எறிதல் வீரர் ஹொகடோ, படகுவலித்தல் வீரர் நாராயண கொங்கனப்பள்ளி, துப்பாக்கி சுடுதல் வீரர் மணிஷ் நார்வால், பாட்மிண்டன் வீரர் கிருஷ்ணா நாகர் ஆகியோரும் தங்களது தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குகின்றனர்.

தடகளம்.. தடகளத்தில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தீப்தி ஜீவன்ஜி, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், ஆடவருக்கான வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா, பாட்மிண்டனில் சுகாஷ் யாதிராஜ், பவினாபென் படேல், ஆடவருக்கான வில்வித்தையில் ஹர்விந்தர் சிங் ஆகியோரும் பதக்கம் வெல்லக் கூடியவர்களாக கருதப்படுகின்றனர்.

இன்று நடைபெறும் தொடக்க விழா அணி வகுப்பில் ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில், குண்டு எறிதலில் வீராங்கனை பாக்யஸ்ரீ ஜாதவ் ஆகியோர் இணைந்து இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்கின்றனர். வரலாற்றில் முதன் முறையாக பாராலிம்பிக்ஸ் தொடக்க விழா ஸ்டேடியத்துக்கு வெளியே டி லா கான்கார்ட் பகுதியில் நடத்தப்பட உள்ளது. தொடக்க விழா அணிவகுப்பு சாம்ப்ஸ்-எலிசீஸ் பகுதியில் நடைபெறுகிறது.

பாராலிம்பிக்ஸில் தமிழக வீரர்கள்... பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மாரியப்பன் தங்கவேலு ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் பங்கேற்கிறார். பாட்மிண்டனில் சோலைமலை சிவராஜ் ஆடவர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொள்கிறார். நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மகளிர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடுகிறார். துளசிமதி முருகேசன் மகளிர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொள்கிறார். மனிஷா ராமதாஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x