Published : 26 Aug 2024 05:11 PM
Last Updated : 26 Aug 2024 05:11 PM

“பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சு ரகசியத்தை ‘நொறுக்கி’ உடைத்ததே இந்திய அணிதான்!” - ரமீஸ் ராஜா

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் வரலாறு காணாத தோல்வியை அடைந்ததை அடுத்து முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் அணியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

முதல் இன்னிங்சில் ரிஸ்வானை இரட்டைச் சதம் கூட அடிக்கவிடாமல் என்னவோ டெஸ்ட் போட்டியை வென்று விடுவது போல், 448/6 என்று டிக்ளேர் செய்து கடைசியில் போட்டியையே தாரை வார்த்து விட்டது பாகிஸ்தான் கேப்டன் சான் மசூதின் முடிவு. அதோடு இல்லாமல் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் படு மோசமாக வீசினார்கள்.

ரிட்டையர் ஆகும் முடிவில் உள்ள முஷ்பிகுர் ரஹீமின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. வங்கதேசத்தின் டான் பிராட்மேன் என்று அழைக்கப்படும் இவர், 190 ரன்களைக் குவித்து விட்டார். இவர்தான் வங்கதேச வரலாற்று வெற்றியின் பிரதான வடிவமைப்பாளர் என்றால் மிகையாகாது. இவருடன் ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் என்று ஒரு அணியாகத் திரண்டும் செயல்பட்டனர் வங்கதேச அணியினர்.

இந்நிலையில் ரமீஸ் ராஜா கூறியது, “முதல் தவறு அணியில் ஸ்பின்னரைத் தேர்வு செய்யாதது. இரண்டாவதாக நம் வேகப்பந்து வீச்சாளர்களின் செல்வாக்கை இனியும் நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்தப் படுவீழ்ச்சி ஆசியக் கோப்பைப் போட்டித் தொடரில் ஸ்விங் கண்டிஷனுக்குச் சாதகமான சூழலில், இந்திய பேட்டர்கள் பாகிஸ்தான் பவுலர்களை புரட்டி எடுத்ததிலிருந்து தொடங்கியதே.

பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி விட்டால் அவர்கள் எழுந்திருக்க மாட்டார்கள் என்ற ரகசியத்தை இந்திய அணி உலகிற்கு உடைத்துக் காட்டியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடத்தில் வேகமும் இல்லை, விவேகமும் இல்லை, திறமையும் காலி. வங்கதேச வேக பவுலர்கள் ஊடுருவும் பந்து வீச்சைச் சாத்தியமாக்க, பாகிஸ்தான் பவுலர்களோ வெறும் நாடகமாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு முழு வேகப்பந்து வீச்சாளர் பாகிஸ்தான் அணியில் இல்லாததால், வங்கதேச அணி வரிசை கூட நம் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக நிமிர்ந்து நடைபோட முடிந்துள்ளது. மணிக்கு 125-135 கிமீ வேகம் வீசவே பாகிஸ்தான் திணறியதைத்தான் பார்த்தோம்.

இப்போது உள்நாட்டில் தோல்வி அடையத் தொடங்கியுள்ளோம், இதில் ஆஸ்திரேலியாவில் போய் எங்கே ஜெயிப்பது? பேட்டர்கள், கன்டிஷனைப் புரிந்து கொள்ளவில்லை. பவுலர்களின் பந்து வீச்சோ காணச் சகிக்கவில்லை. மசூத் கேப்டன்சியை மேம்படுத்துவது இருக்கட்டும். முதலில் அவர் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டும். அதாவது தான் ஒரு பெரிய கேப்டன் என்று நினைத்துக் கொண்டு டக்குகள் அடித்தாலும் அணியில் நீடிப்போம் என்று கனவு காண்கிறார். பாகிஸ்தான் தொடரை இழக்கக் கூடாது. அது பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும்” என்றார் ரமீஸ் ராஜா. அடுத்த டெஸ்ட் இதே ராவல்பிண்டியில் அடுத்த வெள்ளியன்று தொடங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x