Published : 26 Aug 2024 09:39 AM
Last Updated : 26 Aug 2024 09:39 AM

“போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறோம்” - வங்கதேச கேப்டன் ஷான்டோ

நஜ்முல் ஹோசைன் ஷான்டோ

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வாகை சூடியுள்ளது வங்கதேசம். இந்நிலையில், இந்த வெற்றி வங்கதேசத்துக்கு சற்று மகிழ்ச்சி தரும் என தான் நம்புவதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ தெரிவித்துள்ளார். மேலும், உள்நாட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறோம் என தெரிவித்தார்.

பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது வங்கதேச அணி. இரண்டு அணிகளும் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று (ஆக.25) நிறைவடைந்தது. இதில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ தெரிவித்தது.

“இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷலானது. இங்கு நாங்கள் வெற்றி பெற்றதில்லை. ஆனால், இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக எங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது வெற்றி பெற்றுள்ளோம். இதற்காக கடினமாக பயிற்சி செய்தோம். அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

ஷகிப், ஷட்மன் இஸ்லாம், மெஹிதி ஹசன், லிட்டன்தாஸ், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் தேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி வருகிறார். சோர்வு என்பதை அறியாதவர். கடுமையான சூழலில் அவரது ஆட்டம் அமர்க்களம்.

இது எங்களுக்கு மிகவும் முக்கியமான வெற்றியாக அமைந்துள்ளது. ஏனெனில், கடந்த மாதம் வங்கதேசத்தில் கடினமான சூழ்நிலை நிலவியது. இன்னும் சில பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் இந்நேரத்தில் இந்த வெற்றி வங்கதேசத்துக்கு சற்று மகிழ்ச்சி தரும் என நான் நம்புகிறேன். இந்த வெற்றியை போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x