Published : 21 Aug 2024 07:10 AM
Last Updated : 21 Aug 2024 07:10 AM

டி20 கிரிக்கெட்டில் ஓரே ஓவரில் 39 ரன்கள்: சாதனை படைத்தார் சமாவோ வீரர்

டேரியஸ் விசர்

அபியா: ஆடவருக்கான ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்திய தகுதிச் சுற்று போட்டி சமாவோ நாட்டின் தலைநகரான அபியாவில் நடைபெற்றது. இதில் சமாவோ - வனுவாட்டு அணிகள் மோதின. முதலில் பேட்செய்த சமாவோ 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேனான டேரியஸ் விசர் 62 பந்துகளில், 14 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி 20-ல் சதம் விளாசிய முதல் சமாவோ வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும் இந்த இன்னிங்ஸில் வனுவாட்டு வேகப்பந்து வீச்சாளர் நளின் நிபிகோ வீசிய 15-வது ஓவரில் டேரியஸ் விசர் 6 சிக்ஸர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்தார். இதில் 3 நோ-பால்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற வரலாற்று சாதனையை தான் பங்கேற்ற 3-வது போட்டியிலேயே நிகழ்த்தியுள்ளார் 28 வயதான வலது கை பேட்ஸ்மேன் டேரியஸ் விசர்.

இதற்கு முன்னர் இந்தியாவின் யுவராஜ் சிங் (2007-ம் ஆண்டு), மேற்கு இந்தியத் தீவுகளின் கெய்ரன் பொலார்டு (2021), நிகோலஸ் பூரன் (2024), நேபாளத்தின் தீபேந்திர சிங் ஐரீ, இந்தியாவின் ரோஹித் சர்மா - ரிங்கு சிங் (2024) ஆகியோர் மட்டுமே ஓரே ஓவரில் 36 ரன்களை விளாசியிருந்தனர். இந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார் சமாவோ வீரர் டேரியஸ் விசர்.

இந்த ஆட்டத்தில் 175 ரன்கள் இலக்கை துரத்திய வனுவாட்டு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக நிபிகோ 52 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். சமாவோ அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x