Published : 15 Aug 2024 08:31 AM
Last Updated : 15 Aug 2024 08:31 AM

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும்: முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை

ரவி சாஸ்திரி

துபாய்: பந்து வீச்சாளர்களின் தரம் மற்றும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை உள்ளடக்கிய வலுவான பேட்டிங் வரிசை ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக 3-வது முறையாக இந்திய அணி வெல்லும் என முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக நடைபெற்ற இரு தொடர்களையும் இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தது. இதற்கு இம்முறை ஆஸ்திரேலிய பதிலடி கொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதற்கிடையே இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைபயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ஐசிசி இணையதளத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா,முகமது ஷமி ஆகியோர் உடற்தகுதியுடன் உள்ளனர். இவர்களுடன் முகமது சிராஜும் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்றோரும் பெஞ்ச் வலிமையும் சிறப்பாக உள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் என்றே கருதுகிறேன்.

இதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. ஏனெனில்பந்து வீச்சாளர்கள் உடற்தகுதியுடன் இருக்கிறார்கள். இந்திய அணியால் சிறப்பாக பேட் செய்யமுடிந்தால் ஆஸ்திரேலிய அணியைமீண்டும் ஒரு முறை தோற்கடிக்கலாம்.

கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இரண்டு முறை தோற்கடித்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா வெல்லவில்லை. இதன் காரணமாகவே கடந்த ஐந்து முதல் எட்டு ஆண்டுகளாக இந்த இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி இம்முறை பழிவாங்க விரும்பும். அவர்கள் வெற்றி தாகத்துடன் இருப்பார்கள். 2 முறை சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்ததால் இம்முறை இந்திய அணியின் கழுத்தைநெரிக்க விரும்புவார்கள். மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதல் துறையை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது. இவர்களுடன் நேதன் லயனும் நீண்டகாலமாக உள்ளார்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் 20 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச்செய்வதற்கான வழிகளை அவர்கள், கண்டுபிடிப்பார்கள். இந்தடெஸ்ட் தொடர் இந்திய அணியின்பேட்டிங் வரிசைக்கும், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இடையிலான மோதலாக இருக்கும். அதேவேளையில் இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதலையும் காண அனைவரும் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x