Published : 14 Aug 2024 10:11 PM
Last Updated : 14 Aug 2024 10:11 PM

வினேஷ் போகத்துக்கு பதக்கம் இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது நடுவர் மன்றம் 

பாரிஸ்: தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டும் என்று வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறி விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது.

தொடர்ந்து மூன்று முறை அவரது மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 14), வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தகுதி நீக்கம் ஏன்? - பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற எடை பரிசோதனையில் அவர், 100 கிராம் அதிகமாக இருந்தார். இதனால் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் உத்தரவிட்டனர். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.

தொடர்ந்து தகுதி நீக்கத்தை எதிர்த்து பாரிஸில் உள்ள விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். வினேஷ் போகத் தரப்பில் வாதாடுவதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான ஹரிஷ் சால்வேயை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.

டாக்டர் அன்னபெல் பென்னட் என்ற நடுவர் இந்த மனு மீதான விசாரணையை நடத்தினார். தொடர்ந்து மூன்று முறை தள்ளிவைக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 16 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினேஷ் போகத்தின் மனுவை நடுவர் மன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது

வாசிக்க > ஒலிம்பிக் பதக்கத்துக்கான வினேஷ் போகத்தின் போராட்டம் - ஒரு டைம்லைன் பார்வை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x