Published : 14 Aug 2024 04:21 PM
Last Updated : 14 Aug 2024 04:21 PM

ஒலிம்பிக் பதக்கத்துக்கான வினேஷ் போகத்தின் போராட்டம் - ஒரு டைம்லைன் பார்வை

இந்திய வீராங்கனை வினேஷ் போகத்

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான தீர்ப்பு ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுக்கான நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. இறுதித் தீர்ப்பு ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்.

வினேஷ் போகத் வாழ்க்கையில் கடந்த வார நிகழ்வுகளில் தொடர் வரிசை இதோ - ஆகஸ்ட் 6 மிகவும் கடினமான போட்டிகள்: முதல் சுற்று மல்யுத்தமே உலகின் நம்பர் 1 ஜப்பானிய மல்யுத்த வீராங்கனை யுய் சுசாகியை எதிர்கொண்டார். ஆனால் சுசாகி தன் சர்வதேச விளையாட்டு வாழ்க்கையில் தன் முதல் தோல்வியை வினேஷ் போகத் கையில் பெற்றார். பிறகு இருமுறை ஐரோப்பிய சாம்பியன் பட்டம் வென்ற ஓக்சானா லிவாச்சை வீழ்த்தினார். பிறகு பான் அமெரிக்கன் மல்யுத்த சாம்பியன் யுஸ்னெய்லிஸ் குஸ்மான் லோபஸை வீழ்த்தி ஒலிம்பிக் மல்யுத்த இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். இந்த வெற்றிகளை ஈட்டிய அதே நாள் மாலையில் வினேஷ் போகத் 2 கிலோ கூடுதல் எடையைக் குறைக்க உடனடியாக பயிற்சிக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

ஆகஸ்ட் 7: வினேஷ் தன் எடையைக் குறைக்க விடிய விடிய அனைத்து விதமான பயிற்சிகளிலும் ஈடுபட்டார். கூடுதல் முடியையும் வெட்டி எறிந்தார். ஆனால் இத்தனை கடும் முயற்சிகளுக்கும் கூட எடை மசியாமல் 100 கிராம் எடை கூடுதலாகவே இருந்தது. உடனே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 4.6 கிலோ எடையை அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் குறைக்க முடிந்த போது 2 கிலோ எடை குறைக்க முடியாமல் போனதுதான் புரியாத புதிராக உள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டார் போகத். அதாவது ஒரு பதக்கம் கூட பெற முடியாத துயரத்தில் தள்ளப்பட்டார், நாடே வினேஷ் போகத்துக்காக கொந்தளித்தது. இதே நாளின் முடிவில் தகுதி நீக்க முடிவை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதாவது இணைந்து வெள்ளிப்பதக்கம் தர வேண்டுமென முறையிட்டார். இந்த மேல்முறையீட்டுக்குப் பதில் அளிக்க வியாழன் (ஆக.8) காலை வரை அவகாசம் எடுத்துக் கொண்டது விளையாட்டுக்கான நடுவர் மன்றம்.

ஆகஸ்ட் 8: இந்திய ரசிகர்களின் வேதனையையும் வெறுப்பையும் அதிகரிக்கும் அந்த அறிவிப்பு அப்போதுதான் வெளியானது, ஆம்! மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தது இடிபோல் இந்திய ரசிகர்கள் தலையில் இறங்கியது. கனத்த இதயத்துடன் அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், தொடர்ந்து விளையாட தன் உடலிலும் சக்தி இல்லை, மனதிலும் சக்தி இல்லை என்ற தொனியில் பதிவிட்டிருந்தார். வினேஷ் அப்பீல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விசாரணை நடந்தது. ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்குள் வினேஷ் முறையீட்டுக்கான பலன் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. விசாரணையில் முன்னாள் இந்திய தலைமை வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 9: வினேஷின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை CAS-இன் தற்காலிகப் பிரிவில் முடிவடைந்தது. CAS க்கு முன் வரும் அவசர வழக்குகளை எதிர்த்துப் போராடுவதற்காக ஒலிம்பிக்கிற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் பிரெஞ்சு சார்பு வழக்கறிஞர்கள் குழு வினேஷ் சார்பாக வாதாடினர். இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் சார்பாக ஹரீஷ் சால்வே மற்றும் விதூஷ்பத் சிங்கேனியா பிரதிநிதித்துவம் செய்தனர். உடன்பாடான தீர்வு கிடைக்கும் என்று இவர்கள் இருவரும் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 10: தீர்ப்பு ஆகஸ்ட் 11ம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்தது. ஆனால் பிறகு ஏற்பட்ட குழப்பான சம்பவங்களினால் அது தீர்ப்பிற்கான அறிவிப்பு நாள் அல்ல, இருதரப்பினரும் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க இறுதிக்கெடுதான் என்று திருத்தப்பட்டது. தீர்ப்பு ஆகஸ்ட் 13ம் தேதி தான் என்று கூறப்பட்டது. விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தின் தற்காலிகப் பிரிவானது வினேஷ் போகத்திற்கும் யுனைடெட் உலக மல்யுத்தம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இடையேயான வழக்கு விவகாரத்தில் தனித்த தீர்ப்பாளரான டாக்டர் அன்னபெல் பென்னட் தீர்ப்பளிக்க மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டித்தது என்று இந்திய ஒலிம்பிக் சம்மேளன அறிக்கை வெளியானது.

ஆகஸ்ட் 13: இறுதித் தீர்ப்பை அறிவிக்க இன்னும் மூன்று நாட்கள் தேவைப்படும் என்று நடுவர் மன்றத்தின் தற்காலிகப் பிரிவு கூறியது. நடுவர் மன்றம் தனது இறுதி முடிவை ஆகஸ்ட் 16 அன்று இரவு 9:30 மணிக்கு இந்திய நேரப்படி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் புதிரான ஒரு விஷயம் என்னவெனில் ஐ.ஓ.ஏ. தலைவர் பி.டி.உஷா மற்றும் ஹரீஷ் சால்வே செய்தியாளர்களை ஜூம் சந்திப்பில் சந்திக்கவிருந்தார். அது திடீரென ரத்து செய்யப்பட்டது. இது ஏன் என்பதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இவர்க்ள் அறிவிப்பை நம்பி ஜூம் மீட்டிங் லிங்க்கை கிளிக் செய்த பத்திரிகையாளர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.

வினேஷ் மேல்முறையீட்டின் அடிப்படை என்னவெனில், ஆகஸ்ட் 6-ம் தேதி குறிப்பிட்ட எடைப்பிரிவில் மூன்று போட்டிகளில் வென்றார். எனவே அவரது இறுதிப்போட்டி நுழைவு சட்டபூர்வமானதே. மூன்று போட்டிகளுக்குப் பிறகே தண்ணீர் குடிக்க வேண்டும் போதுமான சாப்பாடு சாப்பிட வேண்டும், அப்போதுதான் உடல் தன் ஆரோக்கியத்தை எட்ட முடியும். எனவே இந்த நடைமுறையில் உடல் எடை கூடுவதினால் அவருக்குச் சாதக அம்சம் எதுவும் ஏற்படுவது சாத்தியமில்லை. ஆனால் இது உடல் தேவைக்கான இயற்கையான நடைமுறைதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இயல்பான நடைமுறையே ஒருவரை வீழ்த்துவதற்குக் காரணம் ஆனது துயரம் என்றால், செய்தியாளர்கள் சந்திப்பைத் துறந்தது புரியாத புதிர்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x