Published : 13 Aug 2024 09:22 AM
Last Updated : 13 Aug 2024 09:22 AM
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியாவின் டாப் வீரர்களான கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோர் விளையாடுகின்றனர்.
ஆனால், ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துலிப் கோப்பையில் ஆடவில்லை. செப்டம்பர் 5-ம் தேதி 4 அணிகளுக்கு இடையிலான துலீப் கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரஜத் படிதார் ஆகியோரும் துலீப் கோப்பை கிரிக்கெட்டில் ஆடுகின்றனர். காயமடைந்து புனர் சிகிச்சையில் இருக்கும் முகமது ஷமியும் தனது மேட்சிற்கான உடல்தகுதியை நிரூபிக்கும் விதமாக ஒரு போட்டியில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுவார் என்று கூறப்படுகிறது.
அடுத்த 5 மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இதில் 5 டெஸ்ட்கள் இந்தியாவிலும் 5 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவிலும் நடைபெறுகிறது. இந்தியா - வங்கதேசத்துக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சென்னையில் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது.
உள்நாட்டுக் கிரிக்கெட்டை யாரும் புறக்கணிக்க முடியாது என்று ஏற்கெனவே பிசிசிஐ செயலர் ஜெய் ஷா குறிப்பிட்டிருந்ததை அடுத்து மூத்த வீரர்கள் சிலர் தவிர அனைவரும் துலீப் கோப்பைப் போட்டிகளை ஆட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது ஐபிஎல் -க்கு முக்கியத்துவம் கொடுத்து உள்நாட்டுக் கிரிக்கெட்டை புறக்கணித்தால் கடும் நடவடிக்கைகள் பாயும் என்று அவர் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.
ஸ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் ஐபிஎல் தொடருக்காக ரஞ்சி டிராபி போட்டிகளைப் புறக்கணித்ததால் மத்திய வீரர்கள் ஒப்பந்தத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கும் துலீப் டிராபி போட்டிகள் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 4 மண்டலங்கள் மோதும் இந்தத் தொடர் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும். டாப் இடத்தில் முடியும் அணி வின்னராக அறிவிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment