Published : 11 Aug 2024 10:54 PM
Last Updated : 11 Aug 2024 10:54 PM

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நிறைவு: 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம்!

மனு பாகர், பி.ஆர்.ஸ்ரீஜேஷ்

பாரிஸ்: கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் முடிவடைந்தது. இதில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஜூலை 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 16 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனுபாகர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

அதேவேளையில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் ஆடவர் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். ஆடவருக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

மொத்தம் ஆறு பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடம் பிடித்துள்ளது. ஈட்டி எறிதலில் அர்ஷத் நதீம் வென்ற தங்கப் பதக்கத்துடன் பாகிஸ்தான் 62-வது இடத்தில் உள்ளது.

40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 91 பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஜப்பான் மூன்றாம் இடத்தில் (45 பதக்கங்கள்) உள்ளது.

இப்படியாக கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. தி ஸ்டேட் டி பிரான்ஸ் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாகரும், ஹாக்கி வீரரான பி.ஆர்.ஸ்ரீஜேஷும் ஏந்திச் செல்கின்றனர்.

மேலும் விழாவின் இறுதியில் ஒலிம்பிக் கொடிஇறக்கப்பட்டு அடுத்த ஒலிம்பிக் (2028) நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x