Published : 07 Aug 2024 01:56 PM
Last Updated : 07 Aug 2024 01:56 PM

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். ஆக்ரோஷமான ஆட்டத்தால் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ். இதன் மூலம் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அரையிறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர் வினேஷ் போகத் எடை சோதனை செய்துள்ளார். அப்போது அவரது எடை சற்றே அதிகமாக இருந்ததால் மிகக் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். சைக்கிளிங் உள்பட பல்வேறு பயிற்சிகளில் விடிய விடிய தூங்காமல் ஈடுப்பட்டுள்ளார். பயிற்சியாளர்களும் அவரை உத்வேகப்படுத்தி உடல் எடை குறைப்பு பயிற்சிக்கு உதவியுள்ளனர். இருப்பினும் இன்று அவருக்கு எடை பரிசோதனை செய்தபோது நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட அதிகமாக இருந்துள்ளது.

அதாவது 100 கிராம் எடை கூடுதலாக இருந்த காரணத்தால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.

இந்நிலையில் இரவு முழுவதும் தூங்காமல் பயிற்சி மேற்கொண்டதால் வினேஷ் போகத்துக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பாரிஸில் ஒரு பாலி கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய முக்கிய உறுப்புகள் எல்லாம் சீராக இயங்குகின்றன நீர்ச்சத்து குறைபாட்டுக்காக மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x