Published : 05 Aug 2024 07:21 PM
Last Updated : 05 Aug 2024 07:21 PM

வெண்கலப் பதக்கப் போட்டியில் லக்‌ஷயா சென் போராடி தோல்வி

பாரிஸ்: ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் இந்தியாவின் லக்‌ஷயா சென் பலப்பரீட்சை மேற்கொண்டார். இதில் 1-2 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென் போராடி தோல்வியை தழுவினார்.

இந்தப் போட்டியை பார்க்க இந்தியா மற்றும் மலேசியா நாடுகளின் பார்வையாளர்கள் அதிகளவில் குழுமியிருந்தனர். அதன் காரணமாக இருவருக்கும் சமமான ஆதரவு இருந்தது. முதல் செட்டில் தொடக்கம் முதலே லக்‌ஷயா சென் முன்னிலையில் இருந்தார். அதன் பலனாக முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டில் முதல் சில நிமிடங்கள் 2-2 என ஆட்டம் சமனில் இருந்தது.

அதன் பின்னர் லக்‌ஷயா சென் முன்னிலை பெற தொடங்கினார். இருப்பினும் ஒருகட்டத்தில் 8-8 என்று கணக்கில் சமன் செய்தார் லீ ஸி ஜியா. அதன் பின்னர் அவர் ஆட்டத்தில் முன்னிலை பெற்றார். 8-12 என பின்தங்கிய நிலையில் இருந்து 12-12 என வரிசையாக நான்கு புள்ளிகள் எடுத்து சமன் செய்தார் லக்‌ஷயா. இரண்டாவது செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் சவால் அளித்தனர். இறுதியில் 21-16 என லீ ஸி ஜியா இரண்டாவது செட்டை வென்றார்.

வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் 2-9 என பின்தங்கி இருந்தார் லக்‌ஷயா சென். பின்னர் 6-11 என ஆட்டம் நகர்ந்தது. இறுதியில் 11-21 என அந்த செட்டை இழந்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை வென்ற லீ ஸி ஜியா, வெண்கல பதக்கம் வென்றார். இதனிடையே, துப்பாக்கிச் சுடுதலில் இந்திய கலப்பு ஸ்கீட் அணி வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x