Published : 05 Aug 2024 09:49 AM
Last Updated : 05 Aug 2024 09:49 AM

கிரேட் பிரிட்டனை ‘அழ’ அடித்த ஸ்ரீஜேஷ் - 10 வீரர்களுடன் இந்தியா சாதனை வெற்றி | ஒலிம்பிக் ஹாக்கி அலசல்

பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி தொடரில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பெனால்டி ஷூட் அவுட்டில் பிரிட்டனை 4-2 என்று வீழ்த்தியதில் 10 வீரர்களும் ‘ஜெம்’களாக ஆடினர். குறிப்பாக, ஸ்ரீஜேஷ்தான் இந்தப் போட்டியின் நாயகன் என்று கூற வேண்டும். 60 நிமிட முழு நேர ஆட்டத்தில் ஸ்ரீஜேஷ் செய்த தடுப்புகள் எத்தனை எத்தனை!! முத்தாய்ப்பாக, கடைசியில் பெனால்டி ஷூட் அவுட்டில் அந்தக் கடைசி தடுப்பு உண்மையில் ஒரு ஜீனியஸுக்குத்தான் சாத்தியம்.

தன் ஹாக்கி வாழ்க்கையில் 23 பெனால்டி ஷூட் அவுட்களைச் சந்தித்தவர் ஸ்ரீஜேஷ். இதில் நேற்றைய வெற்றி 13-வது ஷூட் அவுட் வெற்றி என்கின்றன புள்ளி விவரங்கள். 60 நிமிட முழு நேர ஆட்டத்தில் சுமார் 45 நிமிடங்கள் இந்திய அணி 10 வீரர்களுடன் ஆடப்பணிக்கப்பட்டது.

காரணம், ஒரு ரெட் கார்டு ஏற்கெனவே ஒரு இந்திய வீரரை ஓய்வறைக்கு அனுப்பிவிட்டது. இதில் 1-1 டிரா என்ற அசாத்தியம் சாத்தியமானது ஸ்ரீஜேஷ் என்னும் திறக்க முடியா இரும்புக் கதவினால்தான். கிட்டத்தட்ட ஸ்ரீஜேஷ் 20 ஆண்டுகளாக இத்தகைய தடுப்பரணாகத் திகழ்ந்து வருகிறார்.

நேற்று கடைசி பெனால்டி ஷாட்டில் ராஜ்குமார் பால் அட்டகாசமாக பெனால்டியை கோலாக மாற்ற அனைவரும் சூழ்ந்து கொண்டு அமுக்கியது ஸ்ரீஜேஷைத்தான். பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டனும் கூட ஓவர் எக்சைட் ஆகி ஸ்ரீஜேஷைக் கட்டிப்பிடிக்கப் பாய்ந்தார். இந்திய ஹாக்கி அணி உலகக் கோப்பையை 1975-ல் அஜித் பால் சிங் தலைமையில் வென்ற போது கண்ட அதே உணர்ச்சிகரம் நேற்றைய ஆட்ட முடிவிலும் பார்க்க முடிந்தது.

இவ்வளவு பெரிய தடுப்பு வேலைகளைச் செய்துவிட்டு கடைசியில் அவர் கூறியதுதான் தன்னடக்கத்தின் உச்சம்: “நத்திங் ஸ்பெஷல்” என்றாரே பார்க்கலாம். ஆனால், அவர் எளிதாகச் சொல்வது போல் அல்ல அங்கு நடந்தது. பிரிட்டன் அணி, இந்திய அணி அடித்த கோலை சமன் செய்த பிறகே ஆக்ரோஷமாக எழுச்சி கண்டனர். 20-க்கும் மேல் இந்திய கோலை நோக்கி ஷாட்களை அடித்தனர். 10 பெனால்டி கார்னர் வாய்ப்புகளைப் பெற்றனர், ஆனால், அடித்ததோ ஒரே கோல், பிரிட்டனின் தோல்விக்குக் காரணம் ஸ்ரீஜேஷ்.

எப்படி 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்காக வெல்வோம் என்று முன்கூட்டியே இந்திய வீரர்கள் கூறி, அதை முடித்தும் காட்டினரோ அதேபோல் இப்போது ஸ்ரீஜேஷுக்காக தங்கம் வெல்வோம் என்று சபதம் இட்டுள்ளனர் இந்திய அணியினர். அதற்கான நம்பிக்கைக் கீற்று நேற்று தெரிந்தது. இந்த ஒலிம்பிக்ஸில் தொடர்ந்த் ஒவ்வொரு போட்டியாக எடுத்து மறுபடியும் பார்த்தால் ஸ்ரீஜேஷ் எத்தனை தடுப்புகளை நிகழ்த்தியுள்ளார் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

நேற்று ஒவ்வொரு முறை பிரிட்டன் அணி இந்திய கோல் அருகில் கசாமுசா என்று குவிந்து கொண்டிருக்கும் வேளையிலும் ஸ்ரீஜேஷ் கண்களிலிருந்து பந்து தப்பவில்லை, இடது காலை நீட்டி தடுப்பு, டைவ் அடித்து பந்தின் மேல் விழுந்து தடுப்பு, எம்பித் தட்டிவிடுதல் சில வேளைகளில் கோலிலிருந்து வெளியே வேகமாக முன்னேறி தடுப்பது, தேவைப்பட்டால் பின்னாலேயே கோலிலேயே நின்று வரட்டும் பார்க்கலாம் என்று உறுதியுடன் ஆடுவது என்று ஒரு கோல் கீப்பர் ஆட்டமாக அனைத்து ஆட்டங்களையும் ஸ்ரீஜேஷ் மாற்றியுள்ளார்.

நேற்றும் 56-வது நிமிடத்தில் பிரிட்டன் வெற்றி கோலை அடித்திருக்கும். ஆனால்., ஸ்ரீஜேஷின் சேவ் பிரிட்டனை சோர்வடையச் செய்தது. அவர்கள் முகத்தில் சோர்வும், ஆத்திரமும், ஆச்சரியமும் கலவையாகக் கொப்பளித்தன, கடைசியில் ஸ்ரீஜேஷ் அவர்களை அழவே வைத்து விட்டார்.

கடைசியில் ஆட்டம் முடிந்து ஸ்ரீஜேஷ் கூறியதுதான் உணர்ச்சிகரமானது, “ஷூட் அவுட்டின் போது இது ஒரு வேலை என் கடைசி போட்டியாக இருக்கலாமோ அல்லது இன்னும் 2 போட்டிகள் நமக்குக் கிடைக்குமா என்று நினைத்தேன்” என்றார். பிரிட்டன் வீரர்கள் ஒவ்வொருவரும் அழத் தொடங்கினர். 10 வீரர்களுடன் ஆடிய இந்திய அணியை வீழ்த்த முடியவில்லையே என்பதால் அல்ல, ‘ஸ்ரீஜேஷ் என்ற ஒரு நபர் நம் அரையிறுதி நுழைவை வாயிற்காவலனாக நின்று தடுத்து விட்டாரே!’ என்பதனால்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x