Published : 03 Aug 2024 03:49 PM
Last Updated : 03 Aug 2024 03:49 PM

ஹாட்ரிக் பதக்க வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட மனு பாகர் | பாரிஸ் ஒலிம்பிக்

இந்திய வீராங்கனை மனு பாகர்

பாரிஸ்: ஒலிம்பிக் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மனு பாகர் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆஃப் முறையில் 4-வது இடம் பிடித்து வெளியேறினார். இருப்பினும் இந்தியாவுக்காக அவர் 2 வெண்கல பதக்கங்களை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் இறுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் மனு பாகர் தொடக்கத்திலிருந்து முந்துவதும், பின் தங்குவதுமாக இருந்தார். இதில் கொரிய வீராங்கனை ஜியின் யாங் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கிய மனு பாகர் ஒரு கட்டத்தில் 28 புள்ளிகளைப் பெற்றார். ஹங்கேரி வீராங்கனை வெரோனிகா மேஜரும் 28 புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் இருவரும் 3வது இடத்தை பிடித்தனர்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆஃப் முறையில் ஹங்கேரி வீராங்கனை முன்னிலை பெற்று வெண்கலம் வென்றார். மனு பாகர் 4-ம் இடம் பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார். கொரிய வீராங்கனை தங்கமும், பிரான்ஸ் வீராங்கனை வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதன்மூலம் மனு பாகர் நூலிழையில் 3வது பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார்.

முன்னதாக, இந்திய வீராங்கனை மனு பாகர், துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என இரண்டிலும் அவர் வெண்கலம் வென்றுள்ளார். ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற தனித்துவ சாதனையை படைத்துள்ளார் மனு பாகர். மூன்றாவது பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு நூலிழையில் பறிபோனது.

இதனிடையே போட்டிக்குப் பின் மனு பாகர் கூறுகையில், “இறுதிப் போட்டியில் நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். நான் ஒவ்வொரு ஷாட்டிலும் சிறப்பான பங்களிப்பை செலுத்த முயற்சித்தேன். ஆனால், அது நினைத்தபடி நடக்கவில்லை. இருப்பினும் அடுத்த வாய்ப்பு என்பது எப்போதும் இருக்கும். ஆகவே அடுத்த முறை என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x