Published : 02 Aug 2024 11:15 AM
Last Updated : 02 Aug 2024 11:15 AM

உலகத் தரம் வாய்ந்த ஃபினிஷர் அபிஷேக்: பெல்ஜியத்தின் சக்கரவியூகத்தை உடைத்த அற்புதம்! | ஒலிம்பிக் ஹாக்கி அலசல்

பார்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி பெல்ஜியம் அணியிடம் 2-1 என்று தோற்றாலும் இந்திய அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. குறிப்பாக அபிஷேக் அடித்த அந்த கோலும் சரி, பொதுவாக அவரது ஆக்ரோஷ ஆட்டமும் சரி இந்திய ஹாக்கி அணிக்கு முகமது ஷாகித், தன்ராஜ் பிள்ளை, பாஸ்கரன் வரிசையில் ஓர் உலகத்தரமான வீரர் உள்ளதை பறைசாற்றியது.

ஆட்டம் முடிந்தவுடன் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அபிஷேக்கை ‘ஹீ இஸ் வேர்ல்ட் கிளாஸ்’ என்றார். பெல்ஜியம் அணி கடந்த ஒலிம்பிக் சாம்பியன் என்பதும் இந்த ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 கோல்களை அடித்து ஊதித்தள்ளியதும் கவனிக்கத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளாகவே பெல்ஜியம் அணி ஹாக்கி உலகில் கொடிக்கட்டிப் பறப்பதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் தற்காப்பு உத்தி, தடுப்பு உத்தி என்றால் மிகையாகாது.

அந்தச் சக்கரவியூகத்தையே உடைத்தார் அபிஷேக். பெல்ஜியம் அணி கோல் பகுதியில், பெனால்டி ஏரியாவில் பெரிய தவறுகளைச் செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்களையே தவறிழைக்க வைத்தார் அபிஷேக். பந்தை எடுத்துக் கொண்டு அபிஷேக் உள்ளே ஊடுருவ பெல்ஜியம் வீரர் ஸ்லூவர் ஸ்டிக்கால் பந்தைத் தொட்டு நிறுத்துவதில் தவறு செய்ய அபிஷேக் சுதாரித்து பந்தை ஒரு கையினால் பறித்து விறுவிறுவென எடுத்து சர்க்கிளுக்குள் சென்றார். அவரை பெல்ஜியத்தின் 3 வீரர்கள் விரட்டினர். மேலும் அபிஷேக்கிற்கு முன்னாலும் பெல்ஜியத்தின் 2 தடுப்பு வீரர்களும் இருந்தனர்.

தடுப்பு வீரர்களைப் பார்த்தவுடன் பந்தை நிறுத்தினார். திடீரென பந்தை நிறுத்தியதால் பின்னால் வந்த தடுப்பு வீரர்கள் தடுமாறினர். அப்போதுதான் அபிஷேக்குக்கு ஷாட்டை அடிக்க இடம் கிடைத்தது. அடித்த ஷாட் சக்தி வாய்ந்த ஷாட், பந்து கண்ணுக்கே தெரியவில்லை. பெல்ஜியத்தின் சிறந்த கோல் கீப்பர் வின்செண்ட்டிற்கும் பந்து தெரியவில்லை. பந்து கோல் போர்டை அடித்த வேகத்தில் திரும்பி வெளியே வந்தது என்றால் ஷாட்டின் சக்தியை ஊகித்தறியலாம். நீண்ட நாள் கழித்து ஒரு அற்புதமான உலகத்தரம் வாய்ந்த கோலைப் பார்க்க முடிந்தது.

பிலிப்ஸ், அசோக் குமார், கோவிந்தா, முகமது ஷாகித், தன்ராஜ்பிள்ளையிடம் தான் அத்தகைய கோல் ஸ்கோரிங் திறமையைப் பார்க்க முடிந்துள்ளது. இப்போது அபிஷேக். இவர் காயமடையாமல் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஃபீல்ட் கோல்கள் என்பதே அரிதாகி வரும் காலக்கட்டத்தில் அபிஷேக்கின் இந்த கோல் ஹாக்கி உலகில் புதிய பாதையைத் திறப்பதாகவே கூற வேண்டும். மேலும் இந்த ஒலிம்பிக் அல்ல இதற்கு முன்னர் புரோ லீக் தொடரிலிருந்தே இந்திய அணி முதல் கோலை எதிரணியினரை அடிக்கவிட்டுத்தான் பார்த்திருக்கிறோம். நேற்று அபிஷேக் அந்தத் தொடர் இடர்பாட்டை உடைத்து முதல் கோலை இந்தியாவுக்காக அடித்து முன்னிலை கொடுத்தார்.

இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஆடுகிறது. ஆஸ்திரேலியா இந்த முறை அவ்வளவு வலுவாக இல்லை. ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜித்துக்கு டஃப் கொடுத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றால் நாக்-அவுட் சுற்றுகளில் பதக்கச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x