Published : 29 Jul 2024 09:08 PM
Last Updated : 29 Jul 2024 09:08 PM

அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தை சமன் செய்த இந்திய ஹாக்கி அணி | பாரிஸ் ஒலிம்பிக்

இந்திய ஆடவர் ஹாக்கி அணி

பாரிஸ்: ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஹாக்கி அணியின் இன்றைய ‘பி’ பிரிவு போட்டியில், 1-1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தை சமன் செய்தது இந்திய அணி. இறுதியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்த நிலையில், இந்த சமன் சாத்தியமானது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் வீரர் லூகாஸ் மார்டினெஸ் கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அவரது கோலை இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுக்க தவறினார். இதனால், இந்தியாவுக்கு எதிராக 0-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

தொடர்ந்து இந்தியா கோல் அடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு ஆட்டம் கைமீறிப் போய்க் கொண்டிருக்கும்போது, 58-ஆவது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்குக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர் கோலாக மாற்றி 1-1 என்ற கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார்.

‘பி’ பிரிவு புள்ளிப் பட்டியலில் பெல்ஜியம் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. அர்ஜென்டினா 4-வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 6 - 6 அணிகளாக ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 4 அன்று நடைபெறும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x