Published : 25 Jul 2024 01:17 PM
Last Updated : 25 Jul 2024 01:17 PM

“பெரிய வீரர்களால் நான் வலைப்பயிற்சியில் மனமுடைந்தேன்” - அஸ்வின் பகிர்வு

புத்தக வெளியீட்டில் அஸ்வின் | கோப்புப்படம்

"I Have the Streets: A Kutti Cricket Story" எனும் சுயசரிதை நூலை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும், சித்தார்த் மோங்காவும் இணைந்து எழுதி, புத்தகமும் ஜூன் மாதம் 10-ம் தேதியே புத்தகக் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துவிட்டது.

அதிலிருந்து சுவாரஸ்யமான பகுதி ஒன்றை விளையாட்டு செய்திகளை வெளியிட்டு வரும் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அதில் முதல் முறையாக சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி ஒன்றில் அஸ்வின் இரு அணிகளுக்குமே வலைப்பயிற்சியில் பந்து வீச அழைக்கப்பட்டார். அப்போது கிறிஸ் கெய்ல், சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோருக்கு வலையில் வீசக் கிடைத்த வாய்ப்பு பற்றியும் அதில் தான் மனமுடைந்ததையும் பகிர்ந்துள்ளார்.

“கிறிஸ் கெய்ல், சச்சின் டெண்டுல்கர், இன்று கிரிக்கெட் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பெயர் தோனி ஆகியோருக்கு வீசும் பாக்கியம் குறித்து மகிழ்ந்தேன். ஒரு வலைப்பயிற்சியில் வக்கார் யூனிஸ் பந்து வீசியதைப் பார்த்து இம்ரான் கான் நேரடியாக அவரை பாகிஸ்தான் அணிக்கு அறிமுகம் செய்ததை வாசித்திருந்தேன். என் அப்பாவும் எப்படி ஸ்ரீகாந்த் ஒரு போட்டியில் சுனில் கவாஸ்கரை தன் ஆட்டத்தினால் ஈர்த்து இந்திய அணிக்குள் நுழைந்தார் என்பதை என்னிடம் கூறியிருக்கிறார்.

நான் இவர்களுக்கு வீச வேண்டும் என்று கனவு கண்ட வீரர்களுக்கு வீசுவது என்பது நிஜமான தருணம், நெர்வஸாக இருந்தது. நான் கிறிஸ் கெய்லுக்கு வீசி அவரை காட் அண்ட் பவுல்டு செய்தேன், பிறகு எட்ஜ் ஆக்கினேன். ஆனால் அவுட் ஆக்கினால் பேட்டர்கள் பவுலரை லுக் விடுவார்கள். ஆனால் நெட்ஸில் எந்த ரியாக்‌ஷனும் எந்த வீரரும் கொடுக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமே. அவுட் ஆவார் ரியாக்‌ஷன் கிடையாது, என் பந்துகளை சிக்சருக்கு விரட்டுவார் நோ-ரியாக்‌ஷன். எனக்கு இது விசித்திரமாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மட்டுமல்ல, இந்திய வீரர்களுமே இப்படித்தான் ரியாக்‌ஷன் எதுவும் கொடுக்கவில்லை. இந்திய அணியின் நெட் செஷனின் போது என் நண்பர் ஒருவர் ஸ்டாண்ட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். பயிற்சி முடிந்த பிறகு தோனியுடன் தான் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவனது தீரா ஆசை. அப்போதுதானே கல்லூரியில் இந்தப் போட்டோக்களை காட்டி கவனம் ஈர்க்க முடியும் என்பதால். எனக்குமே தோனி மீது தீராப் பற்று. அதாவது அவர் பந்தை அடிக்கும் விதம், அவர் பினிஷிங் முறை நீளமான முடி என்று அவர் ஒரு பெரிய ஐடலாக இருந்தார்.

பயிற்சி முடிந்தவுடன் நான் முதலில் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நான் என் நண்பனின் விருப்பத்தை அவரிடம் சொன்னேன். தோனியும் போட்டோவுக்கு சம்மதம் என்றார். என் நண்பனுக்கோ தலைகால் புரியவில்லை. ஆனால், என் நண்பனிடம் சொன்னேன், அடுத்து நெட்டிற்கெல்லாம் பவுலராக வரமாட்டேன் என்றேன், அவனோ அதிர்ச்சியடைந்து விட்டான். என் கூட வந்து இன்னும் சில போட்டோக்களை எடுத்து அசத்தலாமே என்பது அவனது எண்ணத்தில் இடி விழுந்த அதிர்ச்சியோடு நான் பெரிய பேட்டர்களுக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பை இழக்கிறேனே என்றும் என் முடிவு அவனுக்கு ஆச்சரியமளித்தது.

அப்போது நான் அவனிடம் விவரம் என்ன என்பதைச் சொன்னேன். அதாவது என் இதயம் நொறுங்கி விட்டதாக உணர்ந்ததைச் சொன்னேன். வலைப்பயிற்சிக்கு வரும்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. நெட்டிலிருந்து நேராக அணிக்குள் நுழையும் தேவதைக் கதைகள் என்னுள் உறைந்திருந்தது என்னவோ உண்மைதான். நான் ஒரு பயிற்சி செஷனுக்குச் சென்றோ, மேட்சிலோ இப்படிக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதில்லை. என்னை யாரும் கண்டு கொள்ளாமலோ என்னை அங்கீகரிக்காமலோ இருந்ததில்லை. இதுதான் அன்று எனக்கு வலைப்பயிற்சியில் ஏற்பட்ட அனுபவம், நான் மனம் உடைந்தேன்.

என் பெயர் என்னவென்று கூட யாரும் கேட்கவில்லை. எனக்கு வலைப்பயிற்சிக்கு அழைப்பு விடுத்தவரை கூப்பிட்டு நாளை நான் வரமாட்டேன் என்றேன். தெரு கிரிக்கெட் விளையாடுவதே நல்ல கேளிக்கை இப்படிப்பட்ட பெரிய வீரர்களுக்கு வீசுவதை விட என்று நினைத்தேன். ஆனால், கொஞ்ச காலம் கழித்துத்தான் தெரிந்தது, அவர்கள் வேண்டுமென்றே இப்படி செய்வதில்லை. நூற்றுக்கணக்கான பவுலர்களை அவர்கள் தினமும் எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரின் பெயரையும் விசாரித்துக் கொண்டிருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஆகவே, உங்கள் ஹீரோக்களை தூரத்திலிருந்து வழிபடுங்கள், நெருங்க வேண்டுமென்றால் அவர்களில் ஒருவராக நீங்கள் ஆக நன்றாகச் செயல்பட வேண்டும். என்னைக் கண்டு கொள்ளாதவர்களுக்கு நான் வீச விரும்பவில்லை. அதே போல் எனக்காக எதுவுமில்லாமல் அவர்களுக்குச் சேவை செய்யவும் நான் விரும்பவில்லை. என் முயற்சியில் நான் நன்றாகச் செயல்படும் போது அதை அங்கீகரிக்க வேண்டுமென்பதே என் நிலைப்பாடு. எனவே நெட்ஸிலிருந்து விலகியது குறித்து வருந்தவில்லை. இனி ஒருபோதும் நெட் பவுலராக மட்டுமே இருக்க மாட்டேன்” என அந்தப் பதிவில் கூறியுள்ளார் அஸ்வின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x