Published : 22 Jul 2024 07:14 PM
Last Updated : 22 Jul 2024 07:14 PM

ருதுராஜுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுப்பு - வலுக்கும் எதிர்ப்பு ஏன்? | HTT Explainer

ருதுராஜ் கெய்க்வாட் | கோப்புப்படம்

சென்னை: இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதள பதிவுகளில் தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து பார்ப்போம்.

ருதுராஜ்: இந்திய அணியில் கடந்த 2021 முதல் விளையாடி வருகிறார் ருதுராஜ். அணியில் மற்றும் ஆடும் லெவனில் இவருக்கான வாய்ப்பு என்பது அத்தி பூத்தது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது. பெரிய வீரர்கள் ஆடாத நேரங்களில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறனை அவர் நிரூபித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 23 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 20 இன்னிங்ஸ் ஆடி 633 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதம் விளாசியுள்ளார். இதில் அந்த சதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பதிவு செய்தது. அந்தப் போட்டியில் 57 பந்துகளில் 123 ரன்கள் எடுத்துள்ளார். அண்மையில் முடிந்த ஜிம்பாப்வே உடனான தொடரிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். டி20 கிரிக்கெட்டில் இந்திய சீனியர் வீரர்கள் ஓய்வு பெறுள்ள சூழலில் ருதுராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடருக்கான அறிவிப்பு பல அதிர்வேட்டுகளை போட்டுள்ளது என்றும் சொல்லலாம். டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாகி உள்ளார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு அவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மெட்டில் ஆடும் ‘3டி’ பிளேயராக பார்ப்பதாகவும் பிசிசிஐ தரப்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இந்தs சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட சமூக வலைதள பதிவில் ருதுராஜ் நடந்து வருவதுபோல உள்ளது. ‘நாம் கண்ணால் பார்ப்பது சிங்க நடை’ என அந்த பதிவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளது. அதில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை கமெண்ட் வழியாக பகிர்ந்து வருகின்றனர். ‘கடைசியில் அரசியல் வென்றது’, ‘இது வெறுப்பின் உச்சம்’, ‘ருதுராஜுக்கு நீதி வேண்டும்’, ‘சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்த பிக் மேட்ச் பிளேயர்’, ‘வலுவான கம்பேக் கொடுங்கள்’, ‘அவருடன் பிசிசிஐ எப்போதும் போடுவது தப்புத்தாளங்களே’, ‘சிஎஸ்கே வீரராக இது கடினமான டாஸ்க்’, ‘நீங்கள் ஒரு சாம்பியன்’, ‘அணியில் இடம்பெற ருதுராஜ் தகுதியானவர்’, ‘வாய்ப்புக்காக காத்திருக்கிற கொடுமை வேதனையானது’ என அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

இதற்கு முன்பும் இந்திய அணியில் ருதுராஜுக்கு 6+ மாதங்கள் வரை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி அணியில் வாய்ப்பை பெற்றுள்ளார். வழக்கம் போலவே நிச்சயம் அதனை அவர் ரிப்பீட் செய்வார். இப்போது இந்திய டி20 அணியில் ரோகித், கோலி, ஜடேஜா போன்றவர்கள் இல்லை. அவர்களுக்கு மாற்று வீரர்களை அடையாளம் காண வேண்டிய சூழல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x