Published : 21 Jul 2024 06:50 PM
Last Updated : 21 Jul 2024 06:50 PM

கேப்டன்சி போதாமையுடன் ஆஷஸ் பற்றி பேசுகிறார் பென் ஸ்டோக்ஸ்?

நாட்டிங்காமில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று மேற்கு இந்திய தீவுகளின் கடைசி ஜோடியை 71 ரன்களை அடிக்க விட்டு லீட் எடுத்ததன் பின்னணியில் பென் ஸ்டோக்ஸின் மோசமான கேப்டன்சி உத்தியே இருந்தது என்பது தெளிவு.

11-ம் நம்பர் இடது கை வீரர் ஷமார் ஜோசப் மிக அருமையாக ஆடி 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசியது இங்கிலாந்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். அதுவும் ஒரு சிக்சர் நாட்டிங்காம் ஸ்டேடியத்தின் பவுண்டரியில் இருக்கும் கட்டிடத்தின் மேற்கூரை டைல்களைப் பெயர்த்து எறிந்தது. கஸ் அட்கின்சன் என்ற இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச அதை லாரா பாணியில் பளார் என்று ஷமார் அறைய பந்து மிட் விக்கெட்டின் மேல் கட்டிடம் ஒன்றின் மேல் ஓட்டைப் பெயர்த்து எறிந்தது. அதே போல் ஜோ ரூட்டை ஒரே ஓவரில் ஜொஷுவா டா சில்வா 18 ரன்கள் விளாசினார், 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் வந்தது.

ஜொஷுவா டா சில்வா ஒரேயொரு பேட்டராக ஒருமுனையில் நிலைத்து நிற்க 9 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் ஷமார் ஜோசப் இறங்கினார். ஜொஷுவா டா சில்வா ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிராக சதம் ஒன்றை அடித்துள்ளார். ஆனால் 2ம் நாள் ஆட்டத்தில் அதிரடி காட்டிய அவர் நேற்று கொஞ்சம் மந்தமாகவே ஆடினார். அவரால் ரன்களை எடுக்க முடியவில்லை முடக்கப்பட்டார்.

ஆனால் 9 விக்கெட்டுகள் விழுந்த பிறகு அவர் களவியூகத்தைப் பரவலாக்கி வீரர்களை எல்லைக்கோட்டருகே அனுப்பி ஜொஷுவா டா சில்வாவிற்கும் ஷமார் ஜோசப்பிற்கும் ஒன்றிரண்டு பீல்டர்களை மட்டும் அருகில் அழைத்து, மற்றவீரர்களை பவுண்டரியில் நிறுத்திய உத்தி பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சி போதாமையைப் பறைசாற்றியது.

இவர் களவியூகத்தைப் பரவலாக்கியதால் ஜொஷுவா டா சில்வா சுலபமாக ரன்களை எடுக்க முடிந்தது, அவர் நினைத்தால் சிங்கிளையோ, இரண்டு ரன்களையோ அல்லது பவுண்டரிகளையோ அடிக்க முடிந்தவாறு பென் ஸ்டோக்ஸ் பீல்டிங் உத்தி அமைந்தது. டீப் எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி சிக்சர் விளாசி டா சில்வா அரைசதம் கண்டார். பிறகு மார்க் உட் பந்தை தேர்ட்மேன் திசையில் தூக்கி சிக்சருடன் 400 ரன்களைக் கடக்கச் செய்தார். 78 பந்துகளில் ஷமாரும் டா சில்வாவும் 71 ரன்களை எடுக்க விட்டது பென் ஸ்டோக்ஸின் எதிர்மறை உத்திகளில்தான்.

பென் ஸ்டோக்ஸ் என்ன செய்திருக்க வேண்டும். ஜொஷுவா டாசில்வா என்ன ஷேவாக்கா, லாராவா அல்லது சச்சினா, ஸ்டீவ் ஸ்மித்தா டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு அடிக்க, அவருக்கே நெருக்கமாக பீல்டிங்கை அமைத்து வீச வேண்டியதுதானே. ஒன்றிரண்டு பவுண்டரிகள் அவருக்குக் கிடைத்திருக்கலாம். ஆனால் அவுட் ஆகி விடுவோம் என்ற பயம் அவருக்கு இருந்திருக்கும் அல்லவா? அல்லது பயத்தை மீறி அடிக்கும் போது கேட்ச் ஆகலாம். பவுல்டு ஆகலாம் என்று வாய்ப்புகளை பென் ஸ்டோக்சின் உத்தி உருவாக்கவே இல்லை.

செட்டில் ஆன பேட்டரையே அட்டாக் செய்ய வேண்டியதுதானே?. அவர் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து ஒரு முனையில் தான் மட்டுமே பேட் செய்யுமாறு அனுமதிக்கலாமா?. அப்படியே அவர் செய்தாலும் அவரையே அட்டாக் செய்து அவரை பெவிலியனுக்கு அனுப்பும் உத்திதானே நல்ல கேப்டன்கள் கடைப்பிடிப்பது?. இதைச் செய்ய அவர் மறுத்து களவியூகத்தைப் பரவலாகி 41 ரன்கள் பின் தங்கக் காரணமாக இருந்தார். பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் நேற்று நிச்சயம் பென்ஸ்டோக்ஸுக்கு இது தொடர்பாக ‘டோஸ்’ விட்டிருப்பார்.

இந்த 41 ரன்கள் முன்னிலை பலவீனமான மேற்கு இந்திய தீவுகள் அணி என்பதால் ஒன்றுமில்லாமல் செய்து விடலாம். ஆனால் இதே ஆஷஸ் தொடரில் இத்தகைய தவறுகளை அவர் செய்து முன்னிலையைக் கொடுத்தால் ஆஸ்திரேலியா வீரர்கள் சும்மா விட்டு வைப்பார்களா என்ன?

அதேபோல் வேகம் வேண்டும் என்று விரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களை அவருக்குச் சரிவர பயன்படுத்தத் தெரியவில்லை. மைக்கேல் கிளார்க் எப்படி மிட்செல் ஜான்சனைப் பயன்படுத்தினாரோ, எப்படி கோலியும் ரோஹித்தும் பும்ராவை பயன்படுத்தினரோ அப்படிப்பட்ட உத்தி பென் ஸ்டோக்ஸுக்குத் தெரியவில்லை.

இங்கிலாந்து விவேகத்தைக் கைவிட்டு வேகத்திற்குத் திரும்பியது கிரிக்கெட் உலகில் சுவாரஸ்யத்தை அதிகரித்தாலும் ஆஷஸ் போன்ற தொடரிலோ, இந்தியாவுக்கு எதிராகவோ இப்படிப்பட்ட தவறுகளைச் செய்தால் மீள முடியாது என்பதை பென் ஸ்டோக்ஸுக்கு நேற்று நிச்சயம் மெக்கல்லமும் மற்ற முன்னாள்களும் எடுத்துக் கூறியிருப்பார்கள் என்று நம்புவோமாக.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x