Published : 12 Jul 2024 02:48 PM
Last Updated : 12 Jul 2024 02:48 PM

திராவிட் வழியில் ரோகித் சர்மா: உதவியாளர்களுக்காக பரிசுத் தொகையை விட்டுத்தர சம்மதம்

மும்பை: ராகுல் திராவிட் போல இந்திய கிரிக்கெட் அணி உதவியாளர்களுக்காக தனது பரிசுத் தொகையை விட்டுத்தர முன்வந்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு அறிவித்த ரூ.125 கோடி பரிசுத் தொகையில் அணியின் உதவி பயிற்சியாளர்களுக்கும், உதவியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பரிசுத் தொகை என்பது மிகவும் குறைவு.

பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடியில் அணியில் இடம்பெற்றிருந்த 15 வீரர்களுக்கும் தலா ரூ.5 கோடியும், இவர்கள் தவிர, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் ரூ.5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு தலா ரூ.2.5 கோடியும், மூன்று பிசியோதெரபிஸ்ட்கள் உட்பட அணியின் மற்ற உதவியாளர்கள் 10 பேருக்கு தலா ரூ.2 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தான், பிசிசிஐ வழங்கிய முழு பரிசுத் தொகையை ஏற்க மறுத்து, சக பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை போலவே தனக்கும் பரிசுத்தொகை இருக்க வேண்டும் எனக் கூறி ரூ.5 கோடிக்கு பதிலாக அதில் பாதியை ரூ.2.5 கோடியை மட்டும் ராகுல் திராவிட் பெற்றுக்கொண்டார்.

ராகுல் திராவிட் போலவே தற்போது கேப்டன் ரோகித் சர்மாவும் அணியின் உதவியாளர்களுக்கு சமமான பரிசுத் தொகை கிடைக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஊடகம் ஒன்றுக்கு பேசியுள்ள, இந்திய அணியின் உதவியாளர் ஒருவர், "அணியின் உதவி பணியாளர்களுக்கு பரிசுத்தொகை குறைவாக வழங்கிய விவகாரத்தில் ரோகித்துக்கு வருத்தம்தான். உதவியாளர்களுக்கு சமமான பரிசுத்தொகை வழங்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார். அவர்களுக்கு தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையையும் ரோகித் விட்டுக்கொடுக்க தயார்" என்று உதவியாளர் கூறியுள்ளார்.

ராகுல் திராவிட்டை தொடர்ந்து ரோகித்தும் தனது பரிசுத் தொகையை விட்டுத்தர முன்வந்திருக்கும் செயல் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுவருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x