Published : 09 Jul 2024 02:50 PM
Last Updated : 09 Jul 2024 02:50 PM

“ஸ்டோக்ஸ், மெக்கல்லம் ‘போதும்’ என்று கூறிவிட்டார்கள்” - ஆண்டர்சன் புலம்பல்

ஆண்டர்சன்

42 வயதாகியும் தான் இன்னும் நன்றாகத்தான் பந்து வீசுகிறேன் என்றும் என்னைப் போய் ஓய்வு பெறச் சொல்கிறார்களே என்றும் இங்கிலாந்தின் ஸ்விங் மாஸ்டர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புலம்பியுள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெறும் தனது 188-வது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் பங்கேற்கிறார். அதுவே அவரது கடைசி டெஸ்ட் மேட்ச். இந்நிலையில், தன் வாழ்நாள் முழுதும் எப்படி சிறப்பாக பந்து வீசி வந்தேனோ அதே போல்தான் இப்போதும் வீசுகிறேன், என்னைப் போய் ஓய்வு பெறச் சொல்லி விட்டார்களே என்று ஆண்டர்சன் புலம்பியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஆண்டர்சன் கூறியதாவது, “நான் எப்போதும் போலவே இப்போதும் மிக நன்றாகவே வீசி வருகிறேன். ஆனால், இது எங்காவது முடிய வேண்டும் என்பதை நான் அறிவேன். இப்போது இல்லாவிட்டால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த முடிவை நான் எடுக்கத்தான் வேண்டும்.

இதை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அணி நிர்வாகத்தின் முடிவை முழுக்க முழுக்க புரிந்து கொள்கிறேன். போக வேண்டிய பாதையைப் பற்றி அவர்களின் திட்டங்களையும் மதிக்கிறேன்.

எனக்கு தெரிவுகள் இல்லை. கரியரை முடிக்கும் போது நல்ல சில பந்து வீச்சுகளை செய்து விட்டு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். லங்காஷயருக்காக கடந்த வாரம் களத்தில் இருந்தது மகிழ்ச்சியளித்தது. இங்கிலாந்துக்கு ஆடிய காரணமாக லங்காஷயருக்கு இந்த 20 ஆண்டுகளில் என்னால் அதிகம் ஆட முடியாமல் போனது.

நான் அந்த மூன்று பேரை சந்திக்கும் முன்பாக ரிட்டையர்மெண்ட் பற்றி யோசிக்கக்கூட இல்லை. ஏனெனில், நான் உடற்தகுதியில் சிறப்பாகவே விளங்குகிறேன். ஆனால், ஓய்வைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அதாவது என்னைச் சந்திக்க வேண்டும், முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று முப்பெரும் தலைகளான பென் ஸ்டோக்ஸ், ராபர்ட் கீ, பிரெண்டன் மெக்கல்லம் என்னை அழைத்துப் பேசும் வரையில் எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் எழுந்ததில்லை” என்றார் ஆண்டர்சன்.

ஆண்டர்சன் ஓய்வு முடிவு குறித்துப் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், “ஆண்டர்சன் இன்னமும் கூட பிரமாதமாக வீசுகிறார். ஆனால், ஆஷஸ் தொடரை மனதில் வைத்து எதிர்கால திட்டங்களை மனதிற்கொண்டு அணியில் செய்ய வேண்டிய மாற்றங்களை சிந்திக்க வேண்டியிருந்தது. இப்போதிருக்கும் பவுலர்களுக்கு நிறைய வாய்ப்பையும் நேரத்தையும் அளித்தால்தான் ஆஷஸ் தொடருக்குள் அவர்கள் சிறந்த பவுலர்களாக உருவெடுப்பார்கள்” என்றார் பென் ஸ்டோக்ஸ்.

187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஆண்டர்சன், 700 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வேகப்பந்து வீச்சின் உலக நாயகனாக உள்ளார். இதுவரை ஸ்பின்னர்களான முரளிதரன் 800 விக்கெட்டுகள் என்றும் ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகள் என்றும் 700 மைல்கல்லை எட்டியுள்ளனர். ஆனால், 700 விக்கெட் மைல்கல்லை எட்டிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x