Published : 05 Jul 2024 09:38 AM
Last Updated : 05 Jul 2024 09:38 AM

“பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர்” - கோலி புகழாரம்

கோப்புப்படம்

மும்பை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர் என அவருடன் இணைந்து விளையாடும் இந்தியாவின் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு நேற்று மும்பையில் வெற்றி விழா நடத்தப்பட்டது. அதில் அவர் இதனை தெரிவித்தார்.

இதில் தொடர் நாயகன் விருதை பும்ரா வென்றிருந்தார். அவரது பந்து வீச்சு இதில் அபாரமாக இருந்தது. இந்த சூழலில் கோலி இதனை தெரிவித்துள்ளார். “இந்த மைதானத்தில் உள்ள எல்லோரையும் போல தான் நாங்களும் ஒரு கட்டத்தில் இந்த முறையும் இழந்து விடுவோமோ எண்ணியிருந்தோம். ஆனால், கடைசி அந்த ஐந்து ஓவர்களில் நடந்தது மெய்யாகவே மிகவும் ஸ்பெஷல்.

இந்தத் தொடரில் எங்களுக்கு பின்னடைவு அல்லது நெருக்கடி நிலை ஏற்பட்ட போது எங்களை அதிலிருந்து மீட்டு வந்தவருக்கு நாம் எல்லோரும் பாராட்ட வேண்டும் என்பது எனது விருப்பம். ஒவ்வொரு போட்டியிலும் அவர் இதனை செய்தார். நெருக்கடியான அந்த ஐந்து ஓவர்களில் இரண்டு அபார ஓவர்களை வீசி இருந்தார். தயைகூர்ந்து பும்ராவுக்கு கர ஒலி எழுப்பி எல்லோரும் பாராட்டுங்கள். அவர் ஒரு தலைமுறைக்கான வீரர்” என கோலி பேசினார்.

பும்ரா: “மிகவும் வியப்பாக உள்ளது. இந்த மைதானம் என வாழ்வில் மிகவும் முக்கியமானது. அண்டர் 19-ல் இருந்து இங்கு கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இன்று நான் இங்கு பார்த்தது என்னால் மறக்க முடியாத ஒன்று. இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த சாம்பியன் பட்டம் எங்களுக்கு அந்த ஊக்கத்தை தருகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x