Published : 04 Jul 2024 10:30 PM
Last Updated : 04 Jul 2024 10:30 PM

“இந்த கோப்பை ஒட்டுமொத்த நாட்டுக்குமானது” - ரசிகர் வெள்ளத்தின் நடுவே ரோஹித் நெகிழ்ச்சி!

மும்பை: ஐசிசி டி20 உலகக் கோப்பை ஒட்டுமொத்த நாட்டுக்குமானது என்று மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர் வெள்ளத்தின் நடுவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸ் நகரில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று (வியாழக்கிழமை) காலை தாயகம் திரும்பியது.

தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பு முடிந்ததும் இந்திய வீரர்கள் டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டனர். வீரர்களின் வரவேற்பையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

தனி விமானத்தின் மூலம் மும்பை வந்தடைந்த இந்திய அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பேருந்தில் இந்திய அணி மும்பையின் மரைன் ட்ரைவ் பகுதிக்கு வந்தடைந்தது. அங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

பெரும் ரசிகர் கூட்டத்தின் நடுவே இந்திய அணி ஒருவழியாக மும்பையின் வான்கடே மைதானத்தை வந்தடைந்தது. அங்கும் ஏராளமான ரசிகர்கள் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். பின்னர் வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

மைதானத்தின் நடுவே பேசிய ரோஹித் சர்மா, “இந்த வெற்றி ஒட்டுமொத்த நாட்டுக்குமானது. மும்பை எங்களை எப்போதும் ஏமாற்றியதில்லை. எங்களுக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம். நான் மிக மிக மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன்.

நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து வீரர்களுடன் சேர்ந்து, 11 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்கள் ரசிகர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறோம். இறுதிப் போட்டியில் மிக முக்கியமான கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பாக வீசினார்” என்று ரோஹித் சர்மா பேசினார்.

ஹர்திக் பாண்டியாவை ரோஹித் புகழ்ந்து பேசிய போது ஒட்டுமொத்த மைதானமும் ‘ஹர்திக்.. ஹர்திக்’ என்று உற்சாக முழக்கம் எழுப்பியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x