Published : 30 Jun 2024 10:58 PM
Last Updated : 30 Jun 2024 10:58 PM

“ஒரு அசாதாரணமான ஆல்-ரவுண்டராக...” - ரவீந்திர ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

புதுடெல்லி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “அன்புள்ள ஜடேஜா, ஒரு ஆல்-ரவுண்டராக அசாதாரணமான முறையில் செயல்பட்டீர்கள். உங்களது ஸ்டைலான ஸ்ட்ரோக் ஆட்டத்தையும், ஸ்பின் மற்றும் அற்புதமான ஃபீல்டிங்கையும் கிரிக்கெட் விரும்பிகள் பாராட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக உங்கள் அட்டகாசமான டி20 ஆட்டங்களுக்கு நன்றி. உங்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரவீந்திர ஜடேஜா, "நன்றி. நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் பாய்வது போல, நான் எப்பொழுதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன். இனி அந்தப் பணி மற்ற வடிவங்களில் அதைத் தொடரும்.

டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. இது எனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டிருந்தார்.

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாக அறிவித்துள்ளார் ஜடேஜா. இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஜடேஜாவும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x