Published : 30 Jun 2024 11:32 AM
Last Updated : 30 Jun 2024 11:32 AM

டி20 உலக சாம்பியனாக இந்திய அணி: பயிற்சியாளர் திராவிட் செலுத்திய மவுன ஆதிக்கம்!

இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, 17 ஆண்டுகள் கழித்து இப்போது 2-வது முறையாக டி20 உலக சாம்பியன் ஆனது கேப்டன் ரோகித் சர்மாவுக்கும், அவரை சிறப்பாக வழிநடத்திய பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கும் உரியதாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான த்ரில்லான திருப்பங்கள் நிறைந்த இறுதிப் போட்டியில் இந்தியா வென்று கோப்பையைக் கைப்பற்றியது திராவிட்டுக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் ஸ்பெஷல்.

2007-ல் ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பையில் இதே கரீபியன் மண்ணில் ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறிய நினைவு அவருக்கு இருந்தது. சமீபத்தில்கூட சில பத்திரிகையாளர்கள் அவரிடம் இந்தக் கசப்பான நினைவை கிளப்பினர். ஆனால், எப்போதும் இயல்பாக இருக்கும் ராகுல் திராவிட் அதைக் கண்டு கொள்ளவில்லை.

இப்போது டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் ராகுல் திராவிட்டின் யு-19 கைவண்ணத்தில் உருவான வீரர்கள்தான் உள்ளனர். விராட் கோலி முதற்கொண்டு ராகுல் திராவிட்டின் ஸ்டைலை பின் தொடர்ந்தவர்கள்தாம். 2018-ல் இந்திய யு-19 உலகக் கோப்பையை வென்ற அணியில் ஷுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இருந்தனர்.

இந்திய அணி தோனிக்குப் பிறகு விராட் கோலியின் அதிர்வு கேப்டன்சியிலும் கூட, ரவி சாஸ்திரி போன்ற ஆக்ரோஷ பயிற்சியாளரின் கீழ் கூட ஐசிசி கோப்பை ஒன்றை வெல்ல முடியாமல் தத்தளித்தது. ஊடகங்கள் வாயிலாக ரசிகர்களின் தீரா அவாவாக உருவானது. ரவி சாஸ்திரியின் வெற்றிகரமான பயிற்சி காலக்கட்டத்துக்குப் பிறகு ராகுல் திராவிட் இந்த நெருப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது பலருக்கும் ஆச்சரியமே.

ஏனெனில், இந்திய அணியில் ஏற்பட்டிருந்த ரோகித் - கோலி வேறுபாடுகள், சச்சரவுகள் தீர்க்கப்படாமல் அரைகுறையாக விடப்பட்ட காலத்திலும் இந்திய அணி ஒருவாறாக புதிய வீரர்களுடன் மாறி வரும் காலக்கட்டத்திலும் ராகுல் திராவிட் பொறுப்பேற்றார். அதுவும் கோலியும் ரோகித்தும் தாங்கள் ஆடும் தொடரை அவர்களே தீர்மானிக்கும் அளவுக்கு அவர்களுக்கு பவர் அளிக்கப்பட்டிருந்த ஒரு காலத்தில் ராகுல் திராவிட், அவ்வப்போது சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றோர் தலைமை வகிப்பிலும் அணியை ஒழுங்கமைவுடன் வழிநடத்தினார்.

ராகுல் திராவிட் பயிற்சிக் காலக்கட்டத்தின் கீழ் 56 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 41 போட்டிகளில் இந்தியா வென்றது. 69 டி20 சர்வதேசப் போட்டிகளில் 48 போட்டிகளில் வென்றது இந்திய அணி. இது சாதாரண விஷயமல்ல. இத்தனைக்கும் தன் குருநாதர் கிரெக் சாப்பல் பாணியில் தொடர்ந்து புதிய வீரர்களை அணியில் சேர்த்த வண்ணம் இருந்தார் திராவிட்.

ராகுல் திராவிட் பயிற்சிக் காலக்கட்டத்தில்தான் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 3-ம் நிலை முதல் 7-ம் நிலை வரை 32 வீரர்களை களமிறக்கினார்கள். இதுவரை இந்திய அணியில் இத்தனை வீரர்களுக்கு வாய்ப்பளித்ததில்லை. ஒரே ஒரு டெஸ்ட் தொடரை மட்டுமே இழந்தது இந்திய அணி. 5 தொடர்களில் வெற்றி, 2 தொடர் டிரா.

அனைத்து வடிவங்களிலும் ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ் கிட்டத்தட்ட இந்திய அணி இன்வின்சிபிள்ஸ் என்ற வெற்றிபெற முடியாத அணி என்பதாகவே இருந்தது. இந்த டி20 உலகக் கோப்பையில் தோற்காமலேயே அனைத்து போட்டிகளையும் வென்று சாம்பியன் ஆனது. ராகுல் திராவிட்டின் பயிற்சி முறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

2023-ல் ஆசியக் கோப்பையை வென்றோம். 2024-ல் ராகுல் திராவிட்டின் பயிற்சியில்தான் அனைத்து வடிவங்களிலும் இந்திய அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனை முதல் முறை.

2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியும், 2023 உலகக் கோப்பை இறுதியும் ஒரு கரும்புள்ளியாக ராகுல் திராவிட் கரியரில் சொல்லப்படலாம். ஆனால் இறுதிவரை வரும் வரைதான் பயிற்சியாளர் வேலை, அதன்பிறகு வீரர்களின் வேலை.

ராகுல் திராவிட் இந்திய அணியில் ரவி சாஸ்திரி ஏற்படுத்த முடியாத ஓர் ஒழுக்கத்தையும் கட்டுக்கோப்பையும் கொண்டு வந்தார். ரவி சாஸ்திரி ஒரு கட்டத்தில் விராட் கோலியின் அடிமையாகவே முடிவுகளை எடுத்தார். ஆனால், திராவிட் அப்படியல்ல. கோலியை அட்ஜஸ்ட் செய்தால் நம் கரியர் நீடிக்கும் என்ற ரவிசாஸ்திரியின் சமரச மனோபாவம் ராகுல் திராவிட்டுக்குக் கிடையாது.

ஆக்ரோஷப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேப்டனுக்கு அடிவருடியாக இருக்க, ராகுல் திராவிட் தன் மவுன ஆதிக்கத்தை அடக்கமாக நிறைவேற்றி அணியில் ஒரு பண்பாட்டை நிறுவினார். அந்தப் பண்பாட்டு நிறுவலின் இறுதி முடிவே, இறுதி இலக்கே, இறுதி வடிவமே இந்த டி20 உலகக் கோப்பை வெற்றி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x