Published : 29 Jun 2024 07:19 AM
Last Updated : 29 Jun 2024 07:19 AM

இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை: 11 வருட கோப்பை தாகத்தை தீர்க்குமா இந்திய அணி? | T20 WC Final

பார்படாஸ்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு பார்டாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப் போட்டியில் கால்பதித்து உள்ளன. இந்திய அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் வெற்றி கண்ட நிலையில் கனடாவுக்கு எதிரான கடைசி ஆட்டம் மழை காரணமாக ரத்தாயிருந்தது.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியானது வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளை தோற்கடித்தது. தொடர்ந்து அரை இறுதியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்முழுவதுமே இந்திய அபாரமான செயல் திறனைவெளிப்படுத்தி சிறந்த பார்மில் உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி லீக் மற்றும் சூப்பர் 8சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. எனினும் லீக் சுற்றில் நெதர்லாந்து,வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டத்தை நெருக்கமாககொண்டு சென்றே வெற்றியை வசப்படுத்தியிருந்தது. இதேபோன்று சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் போராடியே வெற்றி கண்டது.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்திலும் கடைசி ஓவரிலேயே வெற்றி பெறமுடிந்தது. இந்த 7 ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடியான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டிருந்தது. ஆனால் அரை இறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை கடும் சிதைவுக்கு உட்படுத்தி வெற்றி கண்டு வரலாற்றில் முதன் முறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்தது.

டி 20 உலகக் கோப்பையின் அறிமுக தொடரான 2007-ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியஅணி அதன் பின்னர் ஒரு முறை கூட மகுடம்சூடவில்லை. அதேவேளையில் ஐசிசி தொடர்களில் கடைசியாக இந்திய அணி 2013-ம்ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. அதன் பிறகு 11 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று ஏமாற்றம் அடைந்தது. இம்முறை இந்திய அணி தடைகளை கடந்து கோப்பை வறட்சியை போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற உணர்வுக்கு அறிமுகமில்லாத தென் ஆப்பிரிக்க அணி இம்முறை மிகுந்த நம்பிக்கையுடனும், ஏராளமான கனவுகளுடனும் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது. பெரிய அளவிலான தொடர்களில் 7 முறை நாக் அவுட் சுற்றை அந்த அணி வெற்றிகரமாக கடக்க முடியாமல் பரிதாபமாக வெளியேயிருந்தது. இதனால் அவர்கள் மீது ‘சோக்கர்ஸ்’ முத்திரை விழுந்தது. இதை நடப்பு தொடரில் அந்த அணி உடைத்து எறிந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் குயிண்டன் டி காக், ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் டாப் ஆர்டரில் சிறந்ததொடக்கம் கொடுக்க முயற்சி செய்யக்கூடும். சூப்பர் 8 சுற்றில் சிறப்பாக செயல்பட தவறிய எய்டன் மார்க்ரம் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும். நடுவரிசையில் ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடியாக செயல்படக் கூடியவர்கள்.

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட இவர்கள் இந்திய அணியின் பந்து வீச்சு துறைக்கு சவால் அளிக்கக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் அன்ரிச் நோர்க்கியா, காகிசோ ரபாடா, மார்கோ யான்சன் ஆகியோரது வேகமும் தப்ரைஸ் ஷம்சி, கேசவ் மகாராஜா ஆகியோரது சுழலும் இந்திய அணியின் பேட்டிங்கை வரிசைக்குஅழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

இந்திய அணியானது மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள ஆடுகளங்களுக்கு தகுந்தவாறுஉயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தும் வீரர்களை கொண்டு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் விராட் கோலி, ஷிவம் துபே ஆகியோர் மட்டுமேதடுமாறி வருகின்றனர். இருப்பினும் இறுதிப் போட்டி என்பதால் இவர்கள் சிறந்த திறனை வெளிப்படுத்துவதில் கூடுதல் முனைப்பு காட்டக்கூடும். சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டம் மற்றும் அரை இறுதியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

கடந்த இரு ஆட்டங்களாக விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த ரிஷப் பந்த் நிலைத்து நின்று விளையாடில் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சீரான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேவேளையில் சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் அபாரமாக செயல்பட்டு வருகிறார். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் கூட்டாக தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசைக்கு அச்சுறுத்தல் கொடுத்தால் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

தித்திக்குமா வழியனுப்பு விழா? மேற்கு இந்தியத் தீவுகளில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றுடன் நடையை கட்டிருந்தது. எனினும் அங்கிருந்துதான் இந்திய அணியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலும் தொடங்கியது. இன்று நடைபெறும் டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும்பட்சத்தில் அது தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு சிறப்பான வழியனுப்பு விழாவாக அமையக்கூடும். ஏனெனில் இந்த தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x